பஹல்காம் தாக்குதலை மறக்காதீங்க.. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக கூறிய மத்திய அரசு அதனை செயல்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் விளைவான பிராந்திய பாதகாப்பு உள்ளிட்டவற்றை புறக்கணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஆர்ட்டிகிள் 370யை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து நீக்கப்பட்டடு ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2023 டிசம்பர் 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் 2024 செப்டம்பர் மாதத்துக்கு சட்டசபை தேர்தலை நடத்தி மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் முடிவடைந்து விட்டது. உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார். இருப்பினும் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை.
இதையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கல்வியாளர் ஜஹூர் அகமது பட் மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷைத் அகமது மாலிக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன் மற்றும் மேனகா குருசாமி ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறுகையில், ‛‛ஆர்ட்டிக்கிள் 270 தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 21 மாத்கள் ஆகிவிட்டது. ஆனால் மத்திய அரசோ அந்த சமயத்தில் உச்சநீதிமன்றத்தில் கூறியபடி மாநில அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கையை தொடங்கிவே இல்லை. இதனால் தனி பெஞ்ச் அமைத்து அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். அதோடு விசாரணைக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க வேண்டும்'' என்றார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி பிஆர் கவாய், ‛‛முதலில் அரசு சார்பில் பதிலளிக்கட்டும்'' என்றார். இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‛‛ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அது நிறைவேற்றப்ட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு மாநில அந்தஸ்து வழங்குவதை உறுதி செய்தோம். பொருத்தமான நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த பிரச்சனை இப்போது ஏன் எழுப்பப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க சில முக்கிய விஷயங்கள் பரிசிலிக்கப்பட வேண்டி உள்ளது. அதுபற்றிய பரிசீலனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மேலும் சில ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றம், ‛‛ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைகள், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் விளைவாக உருவாகும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை புறக்கணிக்க முடியாது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்பாக 8 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றத்துக்கு நோட்டீஸ் வழங்கியது.












Click it and Unblock the Notifications