ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி.. கார்கில், லடாக் தலைவர்களுடன் ஜுலை 1ல் மீட்டிங்
டெல்லி :ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, வரும் ஜூலை 1 ம் தேதி கார்கில் மற்றும் லடாக்கில் உள்ள கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது.
உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி இல்லத்தில் ஜூலை 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு 22 மாதங்கள் கடந்தநிலையில், ஜம்மு காஷ்மீரின் 14 முக்கிய அரசியல் தலைவர்களோடு ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃப்ரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது யூசுப் தாரிகாமி, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் உள்பட 14 தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாநில அந்தஸ்து
மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது, தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த உடன் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தொகுதி வரையறை பணிகள் விரைவாக முடிவடைய அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடியும் அமித் ஷாவும் வலியுறுத்தினார்கள். அதேநேரம் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் பலரும் கூட்டத்தில் முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திருப்பியளிக்க வேண்டும், அதன் பின்னர் தேர்தல் நடத்தலாம்'' என்ற கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிரதமர் மோடி, மாநில அந்தஸ்து என்பது உரிய நேரத்தில் வழங்கப்படும்'' என்று பதிலளித்தாகக் சொல்லப்படுகிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
2019-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க அரசு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை விலக்கியதோடு, ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரை, லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கையாக மாநிலத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இன்டர்நெட் வசதியும் அங்கு துண்டிக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.

மத்திய அரசு விருப்பம்
இந்நிலையில் தலைவர்களை படிப்படியாக வீட்டு சிறையில் இருந்து விடுவித்த மத்திய அரசு, இரண்டு வருடங்களுக்கு பிறகு அதன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைய தொடங்கி உள்ளது. வெற்றிகரமாக தேர்தல் நடத்தி, இயல்பு நிலையை கொண்டுவர வேண்டும் என்பதில் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் ஜம்மு காஷ்மீரின் 14 அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது.

லடாக் மக்கள்
லடாக் மற்றும் கார்க்கில் பகுதி தலைவர்களையும் ஜுலை 1ல் அழைத்து பேச உள்ளது மத்திய அரசு. இதனிடையே லடாக் தலைவர்கள் அதன் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் லடாக் பகுதியை ஒரு பழங்குடிப் பகுதியாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு நம்கியால் கடிதம் எழுதினார், லடாக் பெரும்பாலும் பழங்குடியினர் பிரதேசமாக இருப்பதாகவும், பழங்குடியினர் 98 சதவீத மக்களைக் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்று லடாக்கை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.












Click it and Unblock the Notifications