மீண்டும் சிறப்பு அந்தஸ்து... வலியுறுத்தாத காஷ்மீர் தலைவர்கள்- கச்சிதமாக சாதித்த மத்திய பா.ஜ.க. அரசு?
டெல்லி: பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவில்லை. இது மத்திய பாஜக அரசு நினைத்ததை சாதித்துவிட்டதையே காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.
இதன்மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே அனைத்து சட்டங்களும் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு இது எதிரானது என அப்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
வாழப்பாடி முருகேசன் இறப்பு.. கடுங்கோபத்தில் ஸ்டாலின்.. டிஜிபி திரிபாதி வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை!
அரசியல் தலைவர்களுக்கு சிறை
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர்- லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் மட்டும் சட்டசபையை கொண்டிருக்கும்; லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் அறிவித்தது மத்திய அரசு. அத்துடன் எந்த எதிர்ப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபடுத்தப்பட்டனர். ஓராண்டுக்குப் பின்னர் பலர் விடுவிக்கப்பட்டனர். இன்னமும் சிறைகளில் அரசியல் கைதிகள் உள்ளனர்.
மோடி ஆலோசனை
இந்த நிலையில் டெல்லியில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று சுமார் மூன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா), மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த தொகுதி மறுசீரமைப்பு முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநில அந்தஸ்து- குலாம் நபி ஆசாத்
இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் 5 கோரிக்கைகளை முன்வைத்தார். மாநில அந்தஸ்து மீண்டும் வழங்க வேண்டும்; தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்; காஷ்மீர் பண்டிட்டுகளுக்க் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; மண்ணின் மைந்தர்களுக்கு நிலம், வேலைவாய்ப்பில் அரசியல் சாசன பாதுகாப்பு தேவை; அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.
370வது பிரிவு குறித்து மவுனம்
ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு மீண்டும் தேவை என குலாம்நபி ஆசாத் வலியுறுத்தவில்லை. அதேபோல் பெரும்பாலான காஷ்மீர் தலைவர்கள் சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதனால் நாங்கள் பேசவில்லை என்கின்றனர் இந்த தலைவர்கள்.
மெகபூபா ஆவேசம்
ஆனால் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மட்டுமே தமது ஆவேசத்தை காட்டினார். அவர் பேசுகையில், 370வது பிரிவு என்பது பாகிஸ்தானால் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டது அல்ல. முன்னாள் பிரதமர் ஜஹவர்லால் நேருவும் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேலும் கொடுத்தது. இந்த 370வது பிரிவு நீக்கத்தின் மூலம் காஷ்மீர் மக்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். மத்திய அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என பொங்கினார்.
நினைத்ததை சாதித்தது பாஜக?
இருப்பினும் சர்ச்சைக்குரிய சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை பெரும்பாலான கட்சிகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தாமல் விட்டது மத்திய பாஜக அரசுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. மிகவும் கொந்தளிப்பான ஒரு விவகாரத்தை மிக எளிதாக கடந்து சென்றிருப்பதன் மூலம் மத்திய பாஜக அரசு தாம் நினைத்ததை வெற்றிகரமாக சாதித்துவிட்டது என்பதையே நேற்றைய கூட்டம் வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.