ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு-முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு? தேர்தல் ஆணையம் பரிந்துரை
டெல்லி/ராஞ்சி: தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஜார்க்கன்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க
அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவியும் பறிபோகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தமது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றிருந்தார் ஹேமந்த் சோரன். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு கொடுத்தது.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கும் பரிந்துரையை ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தம்மை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை அப்படியே பாஜகவினர் எழுதியதைப் போலவே இருக்கிறது. ஆளுநர் இன்னமும் எனக்கு அந்த பரிந்துரையை அனுப்பவும் இல்லை. அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்
இந்த பரபரப்புகளுக்கு நடுவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தமது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ராஞ்சியில் இன்று மாலை கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை தொடர்பாக இதுவரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவும் இல்லை. கடந்த சில நாட்களாக தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றிருந்த ஆளுநர், இன்றுதான் ராஞ்சி திரும்பி இருந்தார்.
இன்னொரு பக்கம், ஜார்க்கண்ட் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்கிறது பாஜக. இது தொடர்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில், தார்மீக அடிப்படையில் ஹேமந்த் சோரன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஜார்க்கண்ட் சட்டசபை கலைக்கப்பட வேண்டும். மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications