'மிஷன் 2024'.. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட இருக்கும் மிக பெரிய மாற்றம்.. செயல் தலைவராகும் கமல் நாத்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு விரைவில் முழுவதுமாக மாற்றியமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்திற்கு மிக முக்கிய பதவி வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே தயாராகத் தொடங்கிவிட்டது போலத்தான் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
2024 தேர்தல்
அதில் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குத் தேவையான வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பில் மிக விரைவில் மிகப் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்கவுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் செயற்குழு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் நாத்திற்கு முக்கிய பதவி
இதற்கிடையே மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்திற்குக் காங்கிரஸ் கட்சியில் மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர், அல்லது இடைக்கால தலைவராக அவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை .
சோனியா காந்தியுடன் சந்திப்பு
முதலில் கமல் நாத்திற்கு காங்கிரஸ் பொருளாளர் பதவி வழங்கப்படுவதாகத் தகவல் கசிந்தன. இருப்பினும், கமல் நாத்திற்கு பொருளாளர் பதவியில் ஆர்வமில்லை. இது தொடர்பாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கமல் நாத் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.