கார்கில் வெற்றி தினம்.. "ராணுவத்தின் வீரம் தினமும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.." மோடி புகழாரம்
டெல்லி: கார்கில் போரின் வெற்றி தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்திய ராணுவ வீரர்களின் வீரம், தினந்தோறும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரின், கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை, இந்திய ராணுவம் தீரத்தோடு எதிர்த்து போரிட்டு, விரட்டியடித்து கார்கில் பகுதியை மீட்டது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் 22வது ஆண்டு வெற்றி விழா, கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில், இன்று கொண்டாடப்படுகிறது.
ஜூலை 26 கார்கில் யுத்த வெற்றி நாள்: முஷாரப்பின் முஷ்கோ பள்ளத்தாக்கு சதியை முறியடித்த ராணுவ வீரர்கள்!
அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்றுக்கொண்டிருந்தது. திமுக அந்த கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்த காலகட்டத்தில் கார்கில் பகுதியில் ரகசியமாக வந்து ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான் படைகள். மிகக்கடுமையான குளிர் மற்றும் மலைப்பாங்கான சவாலான சூழ்நிலை நிலவக்கூடிய அந்த பகுதியில், இந்திய ராணுவம் தீரத்தோடு போரிட்டது. விமானப் படைகளும், இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் புறமுதுகிட்டு ஓடியது. இந்திய ராணுவம், நாட்டின் மூவர்ண கொடியை கார்கில் சிகரத்தில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்த தினம் இன்று.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகிறேன். நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக கார்கில் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரம் எங்களுக்கு, தினம்தோறும் உத்வேகம் அளித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் வானொலி உரையில் கார்கில் போர் பற்றி அவர்கள் பேசிய ஒலி இணைப்பையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரம் ஆகியவற்றை நினைவு கூர்வதாக கூறப்பட்டுள்ளது. நம்மை காப்பாற்றுவதற்காக போரிட்ட கதாநாயகர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்துகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.