மோடி வென்றால் இந்தியாவில் இனி தேர்தலே கிடையாது.. கெஜ்ரிவால் அச்சம்
டெல்லி: இந்த மக்களவை தேர்தலில் மோடி வென்று ஆட்சியமைத்தால் இனிமேல் தேர்தலே இருக்காது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அச்சம் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் எதிர்கட்சிகள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் எதிர்கட்சிகள் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் அமித்ஷாவும் மோடியும் சேர்ந்து நாட்டை அழித்து விட்டனர், சுதந்திரக்குப் பிறகு நாடு சந்திக்கும் பெரிய ஊழல்வாதி மோடி. நாட்டில் அவசரகாலநிலை போன்ற சூழல் நிலவுகிறது. சாதி மோதல்களை உருவாக்கி வருகிறார்கள். சகோதரத்துவம் ஒற்றுமை போன்றவற்றிற்கு பெரிய அச்சுறுத்தலை இருவரும் ஏற்படுத்துகின்றனர்.
மோடி, அமித்ஷாவை தவிர வேறு யாருடைய ஆலோசனையையும் கேட்பதில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல். பொருளாதாரமே தெரியாத மோடியும், அமித்சாவும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அழித்து விட்டனர்.
சமீபத்தில் பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ் மோடி இந்த மக்களைவை தேர்தலில் வென்றால் நாட்டில் இனி தேர்தலே நடக்காது என்று கூறியிருந்தார்.
ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமிட்ஷா 2019-ல் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் 2050 வரை பாஜகவை யாராலும் வீழ்த்தவே முடியாது என்று பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் அனைவருமே ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெர்மனியின் அரசமைப்பு சட்டத்தையே மாற்றி தான் சாகும்வரை ஆட்சியில் இருந்தார். அமிட்ஷாவும், மோடியும் இந்தியாவின் ஹிட்லர் போன்றவர்கள் அவர்கள் சாக்ஷி மகராஜ் கூறியதைப் போல இம்முறை ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியாவில் இனி தேர்தலே நடைபெறாது என்று தனது அச்சத்தை வெளியிட்டார் அரவிந்த் கேஜ்ரிவால்.
இந்தியாவில் இனி தேர்தலே நடைபெறாது என்று சாக்ஷி மகராஜ் கூறியதை அடுத்து பாஜக அதிருப்தி தலைவர்கள் பலரும் மோடி இனி வென்றால் நாட்டில் தேர்தலுக்கு வேலையே இல்லை என்றே தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்தியா ஜனநாயக நாடு என்று நாம் பெருமை பொங்க கூற காரணமே இந்த தேர்தல் முறைதான்.
போகாத ஊருக்கு வழி சொல்லும் முதல்வர் பழனிச்சாமி .. கோதாவரி- காவிரி இணைப்பு சாத்தியமா?
எப்படிப்பட்ட ஊழல்வாதிகள் ஆட்சியமைத்தாலும், நிர்வாகத் திறன் இல்லாதவர்கள் ஆட்சியில் இருந்தாலும், தங்களது ஆட்சிக் காலத்தில் பொற்காலத்தை மக்களுக்கு கொடுத்தவர்களாக இருந்தாலும் சரி தங்களது பதவிக் காலம் முடிவடைந்ததும் பதவியில் இருந்து இறங்கி தேர்தலை சந்தித்து அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி விடுகின்றனர்.
இந்தியாவில் ராணுவ ஆட்சியோ அல்லது சர்வாதிகார ஆட்சியோ இதுவரை ஏற்பட்டதில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு எப்போதுமே இப்படி தலைவர்கள் இனி தேர்தலே நடைபெறாது என்று அச்சப்பட்டதும் இல்லை. ஆள்வோரும் இனி நாங்கள் வந்துவிட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எங்களை வீழ்த்த முடியாது, இனி தேர்தலே கிடையாது என்று கூறியதும் இல்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது