கேகே மரணத்தில் தொடரும் மர்மம்! வெளிர் நிறத்தில் இதயம்! ரத்தத்தை கூட வெளியேற முடியல.. பகீர் முடிவுகள்
டெல்லி: பாடகர் கேகே திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முக்கிய பாடகர்களில் ஒருவராக இருந்தவர் பிரபல பாடகர் கிருண்குமார் குன்னாத்! கேகே என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் பல்வேறு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொல்கத்தா நஸ்ருல் மஞ்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் கலந்து கொண்டார்.

கேகே மரணம்
அதன் பின்னர் ஹோட்டல் திரும்பிய கேகே, தனது அறைக்குத் திரும்பிய போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவர் ஹோட்டல் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Recommended Video

போலீசார்
இதற்கிடையே ஆடிட்டோரியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கூட்டத்தைக் கூட்டியதாகவும் அப்போதே ஏசி வேலை செய்யவில்லை என்று பாடகர் கேகே புகார் அளித்தாகவும் சிலர் தெரிவித்தனர். இதனால் சந்தேகத்திற்கு இடமான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட பிரேதப் பரிசோதனை முடிவில், அவர் மோசமான மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இப்போது போலீசார் பிரேதப் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனை முடிவுகள்
போலீசார் வெளியிட்டுள்ள பிரேதப் பரிசோதனை முடிவுகளில், "சப்அரக்னாய்டு ரத்தக்கசிவுடன் தொடர்புடைய இதய நோய் நிலை காரணமாக ஏற்பட்ட கடுமையான கார்டியோஜெனிக் நுரையீரல் எடிமா மற்றும் ஹைபோக்ஸியாவை தொடர்ந்து மரணம் நிகழ்ந்து இருக்கலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. திசுக்களில் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காதபோது ஹைபோக்ஸியா ஏற்படுகிறது. குறைந்த ரத்த விநியோகம் அல்லது ரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் இருப்பதால் திசுக்களுக்கு போதுமான ஆக்சிஜன் வினியோகம் இருக்காது. அப்போது ஹைபோக்ஸியா ஏற்படுகிறது.

வெளியேற்ற முடியவில்லை
பொதுவாக ரத்த செயலிழப்பு ஏற்பட்டால் தான் கார்டியோஜெனிக் நுரையீரல் வீக்கம் ஏற்படும். அதாவது கேகேவின் இதயம் நுரையீரலில் இருந்து பெறும் ரத்தத்தை போதுமான அளவு வெளியேற்ற முடியாது. இதனால் இதயத்தில் அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கேகேவின் இதய நோயியல் நிலையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கொழுப்பு
இதயத்தைச் சுற்றி இருக்கும் சப்-பெரிகார்டியல் கொழுப்பு அதிகரித்து உள்ளதும் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாணங்கள் அடைந்து இருந்ததால் ரத்தம் வெளியேற முடியவில்லை. அங்குப் படிந்து இருந்த அசாதாரண கொழுப்பு படிவுகளே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. "இதயத்தின் மேற்பகுதியைச் சுற்றியுள்ள தசைகளும் இதயத்தின் மற்றொரு பகுதியுடன் ஒப்பிடுகையில் வெளிர் நிறமாக இருந்தது. இதயத்தின் வென்ட்ரிக்கிள்களில் அமைந்துள்ள பாப்பில்லரி தசைகளும் தோற்றத்தில் மாறுபட்டு இருந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வலி
இசை நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே, கேகே தனது இதயத்தில் வலி இருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், அவர் சற்று தளர்வாகவே காணப்பட்டார் என்று அவரை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள பாஜக, பாடகர் கேகே திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உயிரிழந்தார் என்றும் அந்த நிகழ்ச்சியில் பல குறைபாடுகள் இருந்ததாகவும் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications