பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன்...மனிதாபிமான உதவிகள் செய்ததற்கு நன்றி..உக்ரைன் அதிபர் ட்விட்
டெல்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியா, அதில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்ததாகவும் தனது ட்விட்டரில் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார். எனினும், இந்தியா தரப்பில் இருந்து உடனடியாக எந்த தகவலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிடப்படவில்லை.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
ஆண்டின் துவக்கத்தில் தொடங்கிய இந்த போர் ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைந்து விட்டாலும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷ்யா நினைத்த அளவுக்கு இந்த போர் அமையவில்லை.
நாசவேலைக்கு சதியா? ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாக். மீன்பிடி படகு..சுற்றி வளைத்த இந்திய கடற்படை
உக்ரைன் - ரஷியா போர்
உக்ரைனும் ரஷ்யாவுக்கு கடும் சவால் கொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டே வருகிறது. தங்கள் நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைனில் இருந்து வெளியேற மாட்டோம் என்று ரஷ்யா விடாப்படியாய் கூறி தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்
இந்தியாவும் இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த போதும் பிரதமர் மோடி இதையே வலியுறுத்தினார். அதேபோல், உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அவ்வப்போது பேசி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் இன்று தொலைபேசியில் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மோடியுடன் தொலபேசியில் பேசினேன்
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- பிரதமர் மோடியுடன் நான் தொலபேசியில் பேசினேன். ஜி 20 மாநாட்டுக்கு தலைமையை ஏற்றிருக்கும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த தளத்தில் (ஜி 20) தான் நான் அமைதி திட்டத்தை முன் வைத்தேன். தற்போது அதை அமல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் எண்ணிப்பார்க்க்கிறேன்.
நன்றி தெரிவித்துக் கொண்டேன்
ஐக்கிய நாடுகள் அவையில் அளித்த ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகள் செய்ததற்காக நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார். எனினும், இரு தலைவர்களும் பேசியது தொடர்பாக இந்திய தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
பொதுவான கருத்தை மட்டுமே..
அப்போது, ராணுவம் மூலமாக தீர்வு காண முடியாது என்றும் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா பங்களிக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். எனினும் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்கு இதுவரை இந்தியா கண்டனம் எதையும் பதிவு செய்யவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்ற பொதுவான கருத்தையே சொல்லி வருவது கவனிக்கத்தக்கது.