பாஜக முதல் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! 99வது பிறந்தநாளில் வெளியிட முடிவு
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது.
Recommended Video
இந்தியாவில் பாஜக கட்சியை வளர்த்த தலைவர்களில் ஒருவர் அடல் பிஹாரி வாஜ்பாய். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த இவர் 1924, டிசம்பர் 25-ஆம் தேதி அன்று பிறந்தவர்.
பாஜக கட்சியின் கொள்கையில் உறுதியாக இருந்தவர் வாஜ்பாய். இதன்மூலம் பாஜக கட்சியின் முதல் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். 1996 ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரை 13 மாதங்களும், 1999 முதல் 2004 வரை ஐந்து ஆண்டுகள் என மொத்தம் 3 முறை பிரதமராக இருந்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமர் பதவிக்காலம்
இவரது ஆட்சிக்காலத்தில் தான் பொக்ரான் II அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வெற்றி நிகழ்ந்தது. மேலும் இவரது தலைமையிலான மத்திய அரசு தான் 2002ல் ஜனாதிபதியாக அப்துல்கலாமை தேர்வு செய்தது. பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய், வயது முதிர்வு காரணமாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் காலமானார். வாஜ்பாய் பிரதமர் பதவிக்கு முன்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இவர் 9 முறை மக்களவை எம்பியாகவும், 2 முறை மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளார்.
வாஜ்பாய் வாழ்க்கை படமாகிறது
இந்நிலையில் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களான வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் Ullekh NP என்பவர் எழுதிய The Untold Vajpayee: Politician and Paradox என்ற புத்தகத்தை தழுவி இந்தப் படத்தின் திரைக்கதை அமைய உள்ளது. இந்த படத்தில் வாஜ்பாயின் சிறுவயது, கல்லூரி காலம், அரசியல் விவகாரம் உள்ளிட்டவை பற்றிய அம்சங்கள் படமாக உருவாக உள்ளது.
படத்தின் பெயர் என்ன?
"மெயின் ரஹூன் யா நா ரஹூன், யே தேஷ் ரெஹ்னா சாஹியே - அடல்" என்ற தலைப்பில் பாலிவுட் படமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்துக்கு சுருக்கமாக 'அடல்'என பெயரிடப்பட்டுள்ளது. வாஜ்பாயின் 99வது பிறந்தநாள் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 கிறிஸ்துமஸ் நாளன்று இந்த படம் வெளியாக உள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
99வது பிறந்தநாளில் வெளியீடு
இதுபற்றி வினோத் பானுஷாலி கூறுகையில், ‛‛நான் எப்போதும் வாஜ்பாயின் தீவிர ரசிகன். அவர் இயற்கையாகவே சிறந்த தலைவர். முன்மாதிரி அரசியல்வாதி. அவர் தொலைநோக்கு பார்வை கொண்டவர். நாட்டு வளர்ச்சியில் அளப்பரிய பணிகளை செய்தவர். பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் சார்பில் அவரது வாழ்க்கையை படமாக்குவது சிறப்பான ஒன்றாகும்'' என்றார். இதுபற்றி சந்தீப் சிங் கூறுகையில், "வாஜ்பாய் இந்தியாவின் மிகவும் முற்போக்கான பிரதமர். ஒரு திரைப்பட தயாரிப்பாளராக கூறினால் இதுபோன்ற படத்தை வெளியுலகத்துக்கு கொண்டு வருவது அவரது அரசியல் சித்தாந்தங்களை மட்டுமின்றி அவரது மனிதாபிமான பண்புகளையும் வெளிப்படுத்தும்'' என்றார். இந்த படத்தை இயக்கும் இயக்குநர், நடிக்கும் நடிகரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளது.