உ பி யில் காங்கிரசின் வாழ்வா சாவா போராட்டம்.. சிங்கத்தின் குகைக்கு செல்லும் பிரியங்கா!
டெல்லி: நேரு குடும்பத்திலிருந்து மற்றொரு வாரிசு அரசியலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலின் தங்கையும், சோனியாகாந்தியின் மகளுமான பிரியங்கா, இதுவரை அவ்வப்போது உ.பி மாநிலத்தில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இப்போது தீவிர அரசியலில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு, உ பி மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பை வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து கவனிக்க தொடங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வரும் மக்களைவை தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய அணியை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள காங்கிரசுக்கு உ பி யில் பெரும் சறுக்கல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி அங்கு பகுஜன் சமாஜ், மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தது. ஆனால், அந்த இரு கட்சிகளும் காங்கிரசை தங்களோடு சேர்த்துக் கொள்ள விரும்பாமல் தனியாகக் கூட்டணி அமைத்து அறிவித்தன.
மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என மாயாவதியும், அகிலேஷ் யாதவும் அறிவித்தனர். இந்த அறிவிப்பு காங்கிரசுக்கும் அகிலேஷ் மற்றும் மாயாவதி இடையே ஒரு கிவ் அன்ட் டேக் பாலிசி மறைந்திருப்பதை உணர்த்துகிறது. இது ஒருபுறம் என்றாலும் உ பி யில் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்பதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது என்பதன் வெளிப்பாடே தற்போது பிரியங்காவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொதுச் செயலாளர் பதவி.
நீண்ட நெடுங்காலமாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கபப்ட்ட பிரியங்கா தற்போது உ பி யில் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் ராகுலின் வழிகாட்டலில் காங்கிரஸ் படு தோல்விகளை சந்தித்தபோது பிரியங்கா தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்களால் தீவிரமாக எழுப்பப்பட்டது. இப்போது அவருக்கு அதிகாரப் பூர்வமாக அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரஸ் தலைவர்களிடையே குறிப்பாக ராகுலால் வெறுக்கப்பட்டவர்கள் அல்லது ராகுலை விரும்பாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக நிச்சயம் அமையும். அவர்கள் கட்சி மாறுவதையும் இது தடுக்கும். ஆக இந்த நேரத்தில் காங்கிரஸ் பிரியங்காவுக்கு கட்சிப் பதவி கொடுத்திருப்பது ராஜதந்திரம் என்றாலும் அதிலும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை.
பிரியங்கா பொறுப்பேற்கவுள்ள உ.பி மாநிலத்தின் கிழக்குப் பிராந்தியத்தில்தான் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியும், உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியும் உள்ளது. ஆகவே இவர் அங்கு பெரும் உழைப்பை செலுத்தியாக வேண்டும் என்பதே அவருக்கு முன்பு உள்ள சவால். இந்த சவாலில் அவர் வென்று விட்டால் சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை பிடித்து வெற்றி கொண்டது போலாகிவிடும். இது காங்கிரசின் அடுத்த பாய்ச்சலுக்கு உதவும். அதேவேளை இவர் தோல்வியை சந்தித்தால் இந்திரா காந்தியின் உருவத்தில் இருப்பவருக்கு மொத்த இமேஜும் காலியாகும் ஆபத்தும் இருக்கிறது.
வாக்குகளை பொறுத்தமட்டில் அகிலேஷ் உ பி முஸ்லிம் வாக்குகளை பெருவாரியாக பெறுவார், மாயாவதி தலித் வாக்குகளை மொத்தமாக அள்ளுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த இடத்தில் இவர் மோடி எதிர்ப்பு உயர்சாதி பிரிவினரின் வாக்குகளை பிரிப்பாரா அல்லது மோடிக்கு சாதகமான வாக்கு வங்கியில் கை வைப்பாரா என்பது தேர்தலுக்கு பின்னர்தான் தெரியவரும். மோடி எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் பட்சத்தில் அது அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அதேவேளையில் இந்திரா போன்ற தோற்றமும், நேரு குடும்ப வாரிசு என்ற இமேஜும், பாஜக ஆட்சிக்கு எதிரான மக்களின் மன நிலையம் கை கொடுக்கும் பட்சத்தில் அங்கு ஒரு புதிய அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கான சாதியக் கூறுகளும் அதிகம்.
இந்தியாவை பொறுத்த மட்டில் இவர் பிற மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி வரும்போது செல்லுமிடங்களில் கை கொடுக்கும் பட்சத்தில் பெரும் கூட்டத்தை கவர்ந்து இழுப்பவராக இருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த கூட்டம் அத்தனையும் வாக்குகளாக மாறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தென்னிந்தியாவை பொருத்தமட்டில் நேரு குடும்பத்தின் மீது குறிப்பாக இந்திராவின் மீதான ஈர்ப்பு 45 வயதை கடந்தவர்களிடம் இன்னமும் இருப்பதை காண முடிகிறது, ஆக இந்த தேர்தலில் காங்கிரசுக்கும் ராகுலுக்கும் பிரியங்கா புதிய உத்வேகத்தை அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.