"முழு லாக்டவுன்" போடப்படுமா.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த .. பரபர விளக்கம்
முழு லாக்டவுன் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் தந்துள்ளார்
டெல்லி: இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துக் கூறினார். அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் திடீரென தொற்று வேகமாக பரவிவருகிறது.. அதிலும் இந்த 2வது அலை சற்று ஆபத்தானது என்றுகூட சொல்கிறார்கள்..
அந்த வகையில் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தீவிரமான லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
விளக்கம்
எனினும் பரவி வரும் தொற்றின் வேகத்துக்கு முழு லாக்டவுன் போடப்படலாம் என்றும் அடிக்கடி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. இந்நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , உலக வங்கி குழு தலைவரிடம் அளித்த விளக்கம் தற்போது வெளியாகி உள்ளது. உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸுடன்,வீடியோ கான்பரஸ் மூலம் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்..
பாராட்டு
அப்போது, இந்தியாவில் இருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து உலக வங்கி குழுதலைவர் பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து, உலக வங்கிப் பணிகள் மற்றும் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆலோசனை நடந்துள்ளது.. இந்தியாவில் அதிகமாக பரவி வரும் தொற்று குறித்தும், அதற்கு அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்தும், உலக வங்கி குழு தலைவரிடம் நிர்மலா சீதாராமன் விவாதித்துள்ளார்.
பொது முடக்கம்
அப்போது, கொரோனா பரவல் எவ்வளவு மோசமான நிலைமையில் இருந்தாலும்கூட, ஏற்கனவே அமல்படுத்தியதுபோல, பெரிய அளவிலான பொது முடக்கம் அமல்படுத்த மாட்டோம், உள்ளூர் கட்டுப்பாடு மட்டுமே இருக்கும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். அப்படி முழு லாக்டவுன் செய்தால், பொருளாதாரத்தை அது முற்றிலும் முடக்கிவிடும் நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதில் தாங்கள் கவனமாக இருப்பதாகவும் எடுத்து கூறியுள்ளார்.
5 அம்ச திட்டம்
இந்த கொரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் 5 அம்ச திட்டங்கள் பற்றியும் நிர்மலா சீதாராமன் எடுத்து சொல்லி உள்ளார்.. அதாவது, டெஸ்ட், நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி திட்டம், நோயை கட்டுப்பாட்டுக்கான நடத்தை விதிமுறைகள் போன்ற 5 அம்ச திட்டங்கள் பற்றி விளக்கிய நிர்மலா சீதாராமன், இதன் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் உலகவங்கி குழு தலைவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
விவாதங்கள்
இந்த ஆலோசனையில், நிதித் துறைகளில் மறு சீரமைப்பு, நீர் மேலாண்மை, சுகாதார மேம்பாடு, சிவில் சர்வீஸ் தொடர்பாகவும், எல்இடி பல்புகளை அதிகமாக பயன்படுத்துதல், எரி பொருட்களில் எத்தனால் கலப்பதை அதிகப்படுத்துவது, பேட்டரி வாகனங்களை அதிகரிப்பது போன்றவை குறித்தும் இருதரப்பு விவாதங்கள் நடந்துள்ளன.