காங்கிரஸ் திருந்திடுச்சு.. யார் சொன்னது காங்கிரஸேதான்.. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு குழு!
டெல்லி: 4 மாநில சட்டசபை தேர்தல்களில் மரண அடி வாங்கிய நிலையில் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில்தான் காங்கிரஸ் வென்றது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. மத்திய பிரதேசம், மிசோரமில் பெருந்தோல்வியை காங்கிரஸ் எதிர்கொண்டது.

இத்தேர்தல்களில் தாங்கள் இடம் பெற்றிருந்த "இந்தியா" கூட்டணி குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் பெரியண்ணன் போக்கில்தான் காங்கிரஸ் நடந்து கொண்டது என்பது பொது விமர்சனம். "இந்தியா" கூட்டணியை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைப்பதில் காங்கிரஸ் அதிகமான இடங்களைப் பெற்றிருக்கலாம். மத்திய பிரதேசத்திலும் மிசோரமிலும் ஆட்சியில் கூட இடம் பெற்றிருந்திருக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. இதனையே "இந்தியா" கூட்டணியின் தலைவர்களும் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி இருந்தனர்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல இப்போது "இந்தியா" கூட்டணி மீது காங்கிரஸ் கரிசனம் செலுத்தி உயிர்ப்பிக்க முனைகிறது. இனி அடுத்து லோக்சபா தேர்தல்தான். ஏற்கனவே லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் இருக்கும் காங்கிரஸ் 'இந்தியா' கூட்டணி எனும் படகில் சரியாக பயணித்தால் கவுரவமான இடங்களைப் பெறும் என்பதுதான் கருத்து கணிப்புகளின் முடிவுகள்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் இந்த பெரியண்ணன் போக்கு, கூட்டணி கட்சிகளுடன் இணக்கம் காட்டாமல் தன்னிச்சையாக செயல்படுவது விமர்சிக்கப்படும் என்றே கூறப்பட்டது. இதனை சமாளிக்கும் விதமாக திடீரென இன்று லோக்சபா தேர்தலுக்காக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக 4 பேர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கான காங்கிரஸ் குழுவில் முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல் மற்றும் முகுல் வாஸ்னிக், மோகன் பிரகாஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவாவது காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ள "இந்தியா" கூட்டணியில் இணக்கமான போக்குடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துமா? என்பது கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications