தொட்டதெல்லாம் டுமீல்? “இந்தியா” கூட்டணி தலைமை செயலகம் டெல்லி சிபிஎம் ஆபீசிலா? மம்தா பானர்ஜி ஆவேசம்!
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் தலைமை செயலகம் டெல்லியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் அமைக்கப்படலாம் என்ற யோசனைக்கு எடுத்த எடுப்பிலேயே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டம் நாளை இரவு விருந்துடன் தொடங்குகிறது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்பாடு செய்திருக்கும் இந்த விருந்தில் "இந்தியா" கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியது குறித்து நாளைய இரவு விருந்தில் கலந்து ஆலோசிக்கப்படும்.

"இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம், தலைமை செயலகத்தை எங்கு அமைப்பது, கூட்டணியின் பல்வேறு குழுக்களை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் காங்கிரஸ் திட்டவட்டமாக இருக்கிறது. இதனால் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதிஷ்குமாரிடம் கொடுக்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அதேநேரத்தில் "இந்தியா" கூட்டணியில் இடதுசாரிகள் தங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என வழக்கம் போல போர்க்கொடி தூக்கி இருக்கின்றன. "இந்தியா" கூட்டணியின் தலைமை செயலகம் டெல்லியில் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த செயலகத்தை எங்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கலாம் என்கிறதாம் சிபிஎம். ஆனால் சிபிஎம் கட்சி அலுவலகத்துக்கு நாங்க எப்படி வருவதாம்? என எடுத்த எடுப்பிலேயே "ரெட்" சிக்னல் போட்டு நிற்கிறாராம் மமதா பானர்ஜி.
இதனால் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இடதுசாரிகளுக்கும் இடம் கொடுக்கலாம் என்கிற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாம். இருந்த போதும் உரிய முக்கியத்துவம் இல்லாமல் போனால் "இந்தியா" கூட்டணியைவிட்டு விலகத்தான் நேரிடும் என்கிற தொனியில் இடதுசாரி தலைவர்கள் பேசி வருகின்றனராம். அதேநேரத்தில் கேரளாவை தவிர இடதுசாரிகளால் வேறு எங்கும் "இந்தியா" கூட்டணிக்கு ஆதாயம் இல்லை.. அதனால் போனால் போகட்டும் என்கிற பதிலை வேகமாக முன்வைக்கிறதாம் திரிணாமுல் காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications