கடவுளே கோவாவை காப்பாற்று.. திரிணாமுல் காங்கிரசை கணக்கு போட்டு கிண்டல் செய்த ப.சிதம்பரம்
டெல்லி: கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கிண்டலடித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்திற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளர் மஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
கோவா சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அறிவிப்புகளை அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு அள்ளி வீசி வருகின்றனர். இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பியான மகுவா மொய்த்ரா கூறும்போது கிருஹலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் வருவாய் ஆதாரமாக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்படும் என கூறியிருந்தார்.
ஏற்கனவே மகளிருக்கு பாஜக அரசு ஆயிரத்து 500 ரூபாய் நிதி உதவி அளித்து வந்தார் அந்தத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு காரணமாக ஒன்றரை லட்சம் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தினர் என்றும் திரிணாமுல் காங்கிரஸின் இந்த அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பயன் பெறுவர் எனக் கூறியிருந்தார்.

ப.சிதம்பரம் கிண்டல்
திரிணாமுல் காங்கிரஸின் இந்த வாக்குறுதி குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்து இருந்தார். அதில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெறும் அளவுக்கு தகுதியான கணக்கு இங்கே உள்ளது என்றும் கோவாவில் மூன்றரை இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கினால், மாதத்திற்கு 175 கோடி ரூபாய் செலவாகும் என்றார்.

கடவுளே கோவாவை காப்பாற்று
திரிணாமுல் காங்கிரஸின் இந்த அறிவிப்பால் வருடத்திற்கு சுமார் 2500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், கடந்த ஆண்டு மார்ச் மாத முடிவில் கோவா மாநிலம் 23 ஆயிரத்து 483 கோடி ரூபாய் கடன் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ளது எனவும், கடவுள் அருள் புரியட்டும், கோவாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ப.சிதம்பரத்திற்கு பதிலடி
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார் அக்கட்சியின் எம்.பி.யும் திட்டம் குறித்து அறிவித்தவருமான மகுவா மொய்த்ரா. ஆமாம் அய்யா திரு சிதம்பரம் அவர்களே மூன்றரை லட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வழங்குவதற்கு, 2100 கோடி ரூபாய் செலவாகும் ஆனால் இது கோவாவின் பட்ஜெட்டில் 6 முதல் 8 சதவீதம் தான் இதனை கண்டிப்பாக செய்ய முடியும் என கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்
நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா பரவல் நாசம் செய்துவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் கூறும் நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டியது என்றும், கண்டிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் அதனை நிச்சயமாக செய்யும் எனவும் மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications