ஐ.நா.வில் மாலத்தீவு பெற்ற அமோக வெற்றி.. பின்னணியில் இந்திய உதவி.. ஒத்துழைப்பு அதிகரிக்க நல்ல சான்ஸ்
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கு குழு தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இந்த பிராந்தியத்தில், இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். இந்த ஆண்டு, மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்திற்கு பல நாடுகளும் ஆதரவு அளித்தது. இந்தியாவும் கடந்த நவம்பரில் அப்துல்லா ஷாஹித்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சலமாய் ரசூல் இதே பதவிக்கு போட்டியிடுவதாக 6 மாதங்கள் முன் அறிவித்தார். ஆபகானிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு தந்தாலும், திடீரென கடைசி கட்டத்தில் வந்ததால், முன்கூட்டியே பலர் மாலத்தீவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

வெற்றி பெற்ற மாலத்தீவு
ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1966-67ல் இந்த பதவியில் இருந்துள்ளது. மாலத்தீவு இந்த பதவியை வகித்தது இல்லை. மாலத்தீவு ஏற்கனவே பலரிடம் பேசி ஆதரவை பெற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் மாலத்தீவு வெற்றிபெற்றது. அப்துல்லா ஷாஹித்திற்கு ஆதரவாக 143 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலமாய் ரசூலுக்கு 48 வாக்குகளும் கிடைத்தன.

இந்தியாவின் உதவி
ஷாஹித்தின் வெற்றி இந்தியாவால் வரவேற்கப்பட்டது. மாலத்தீவுகள் சார்பில் 76 வது பொதுச் சபைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதுமே இந்தியா, அவர் வெற்றிக்கு உதவுவதில் திரைக்குப் பின்னால் தீவிரமாக பணி செய்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, ஷாஹித்திடம், ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி நாகராஜ் நாயுடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார். பல நாடுகளிடம் மாலத்தீவுக்காக இந்தியா ஆதரவு திரட்டியது.

ஆப்கானிஸ்தானுடன் சமாதானம்
ஆப்கானிஸ்தானும் இந்தியாவுக்கு நட்பு நாடு. எனவே அவர்கள் மனம் கோணிவிடக் கூடாது என்பதிலும் இந்தியா கவனம் செலுத்தியது. ஜனவரியில் ஆப்கன் தாங்களும் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனால் நவம்பர் மாதமே, மாலத்தீவுக்கு, இந்தியா பகிரங்கமாக ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. எனவே, இனிமேல் நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்று ஆப்கனுக்கு இந்தியா சமாதானம் கூறி, நட்பு கெடாமல் பார்த்துக் கொண்டது.

ஐ.நா.வுடன் நட்புறவு
இதற்கு முன்பு, ஐநா பொதுச் சபை தலைவராக துருக்கி நாட்டின் வோல்கான் போஸ்கீர் பதவி வகித்தார். ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் அவர் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஷாஹித்தின் வெற்றி இந்தியாவுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. ஷாஹித்தின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு செப்டம்பர் வரை நீடிக்கும், அதே நேரத்தில் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியாவின் பதவிக்காலம் 2022 டிசம்பர் வரை உள்ளது. ஐ.நா.வில், இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையில் ஒரு நல்ல ஒருங்கிணைப்பு ஏற்பட இந்த காலகட்டம் பயன்படும்.












Click it and Unblock the Notifications