மாலேகான் குண்டு வெடிப்பு: ராணுவ துணை தளபதி, சாத்வி உள்ளிட்டோர் மீது தீவிரவாத சதி குற்றச்சாட்டு பதிவு
Recommended Video
டெல்லி:மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ராணுவ துணை தளபதி புரோகித் பிரசாத் உள்ளிட்டோர் மீது தீவிரவாத சதி சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய, சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 2-ம் தேதி முதல் துவங்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு, மும்பையில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ துணை தளபதி புரோகித் பிரசாந்த், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அஜய் ரதிர்கார், சுதாகர் திவேதி, சமீர் குல்கர்ணி மற்றும் சுதாகர் சதுர்வேதி ஆகிய 7 பேர் மீதும் தீவிரவாத சதி, கொலை மற்றும் அது தொடர்பான குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் அனைவர் மீதும் உபா சட்டத்தின் கீழும் வழக்கு பாய்ந்தது. இதை எதிர்த்து மும்பை ஹைகோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவர்கள் 7 பேர் மீதும், தீவிரவாத தடுப்பு சட்டம் உட்பட தொடர்புடைய அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த நீதிமன்றத்தில் புரோகித் சார்பில் தன்னை, வழக்கிலிருந்து விடுவிக்க விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. விசாரணை நவம்பர் 2ம் தேதி துவங்க உள்ளது.