பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க பக்கா ஸ்கெட்ச்- டெல்லியில் மமதா டேரா போட்டதன் பின்னணி!
டெல்லி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக (பா.ஜ.க, பாஜக) அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகளில் மும்முரமாக இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. டெல்லியில் தற்போது முகாமிட்டுள்ள மமதா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான முதல் கட்ட பணிகளைத் தொடங்கி உள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் மமதா. இதனால் தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க.வுக்கு படையெடுத்து ஓடிய பலரும் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிவிட்டனர்.
அத்துடன் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக எம்.எல்.ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த வேகத்திலேயே எப்படியாவது தேசிய அளவில் ஒரு மெகா கூட்டணியை கட்டமைத்துவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு டெல்லியில் முகாமிட்டுள்ளார் மமதா பானர்ஜி.

சோனியாவுடன் சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்து பேசினார் மமதா. சோனியாவுடனான சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட போது, ராஜீவ்காந்தி காலத்தில் இருந்தே சோனியாவுடன் நல்லுறவு உள்ளது. அதை இப்போதும் தொடர்ந்து வருகிறேன் என்று மட்டும் சொல்லாமல், தேநீர் விருந்துக்கு சோனியா அழைத்திருந்தார். அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார் என நட்புக்கரத்தை நீட்டி இருந்தார் மமதா.

வலிமையான மாநில கட்சிகள்
காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் இணைந்த கூட்டணியைத்தான் மமதா விரும்புகிறார் என்பதையும் நேற்றைய சோனியாவுடனான சந்திப்புக்குப் பிந்தைய பேட்டியில் மமதா கூறியிருந்தார். குறிப்பாக பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் ஒய்,.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் கட்சிகளைக் குறிப்பிட்டு மமதா பேட்டியளித்திருந்தார். இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறுகையில், மாநில கட்சிகள் தங்களது மாநிலங்களில் வலிமையாக உள்ளன. இந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் வலிமையாக இணைந்து நின்றால் மிகப் பெரும் பிரளயமே ஏற்பட்டுவிடும். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட்டோருடன் தொடர்ந்து பேசி வருகின்றேன் என்றும் அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

கூட்டணிதான் தேவை
அத்துடன் இல்லாமல், எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட ஒரு களம் தேவை- அதாவது ஒரு கூட்டணி தேவை என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார் மமதா பானர்ஜி. அதேநேரத்தில் இப்போதுதான் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் மமதா.

பிரதமர் வேட்பாளர் குறித்து மமதா
பின்னர், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக 2 விதமான கருத்துகளை மமதா முன்வைத்திருந்தார். "தாம் சாதாரண தொண்டன்; தெருவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். யாருடைய தலைமையையும் நான் ஏற்க தயார் என கூறியிருந்தார் மமதா. அதேநேரத்தில், குஜராத் முதல்வராக இருந்த மோடி நாட்டின் பிரதமரானால் அவர் டெல்லியை சேர்ந்தவராகிவிடுகிறார்; மேற்கு வங்க முதல்வரான இந்த மமதா பிரதமர் வேட்பாளர் எனில் வெளிமாநிலத்தவரா? என்கிற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இதன் மூலம் பிரதமர் வேட்பாளர் ரேஸில் தாமும் இருக்கிறேன் என சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்ன செய்யும் பாஜக?
தற்போதைய நிலையில் மமதாவைப் பொறுத்தவரையில் மெகா கூட்டணி ஒன்று தேவை; பாஜகவை மிரள வைக்க எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஓரணியில் திரண்டாக வேண்டும்; பாஜகவை பணிய வைக்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அஜெண்டா. அதனால்தான் எதிர்க்கட்சிகள் மட்டும் சீரியசாக களமிறங்கினால் 6 மாதத்தில் களநிலவரமே வேறு என்றார் மமமதா. ஆனால் மமதாவின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற விட்டு வேடிக்கை பார்க்கவா போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications