மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்: பிப்.28-ல் முதல் கட்ட வாக்குப் பதிவு
டெல்லி: மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மணிப்பூர் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அட்டவணையை ஜனவரி 8, 2022 தேதியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 1, 2022 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 4, 2022 அன்றும் வெளியிடப்பட்டது. முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 27, 2022 அன்றும் இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3, 2022 அன்றும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் மணிப்பூருக்கு சென்ற ஆணையம், அரசியல் கட்சிகள், தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் மாநில அளவிலான பிற அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், அசாம் ரைபிள்ஸ் தலைமை இயக்குநர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடியது. பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து இந்த பயணத்தின் போது ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டன.
தற்போதைய கள நிலவரம், கடந்த கால நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து தரவுகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 153-ன் கீழ், மணிப்பூர் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதிகளை மாற்றியமைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 28, 2022 (திங்கட்கிழமை) அன்றும் இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 5, 2022 (சனிக்கிழமை) அன்றும் நடைபெறும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications