மக்களாட்சியை காலில் போட்டு மிதித்த இந்திராவின் எமர்ஜென்சி..மன்கிபாத் உரையில் பிரதமர் மோடி விளாசல்
டெல்லி: 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்ட போது, மக்களாட்சியை காலில் போட்டு மிதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் இறுதியில் வானொலியில் மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். இன்றைய மன்கிபாத் வானொலி உரையில் எமர்ஜென்சி தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:

1975 அவசர நிலை
1975ஆம் ஆண்டு நடந்தது இது. இதே ஜூன் மாதத்தில் தான் emergency எனப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, தேசத்தின் குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன, அப்படிப் பறிக்கப்பட்ட ஒரு உரிமை தான் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் படி, அனைத்து இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்குமான உரிமை. அந்தக் காலத்தில், இந்தியாவில் மக்களாட்சியை காலில் போட்டு மிதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எத்தனை கொடுமைகள்
தேசத்தின் நீதிமன்றங்கள், அனைத்து சட்ட அமைப்புகள், பத்திரிக்கைகள், என அனைத்தின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தணிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்றால், அனுமதி பெறாமல் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது என்ற நிலைமை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அப்போது புகழ்பெற்ற பாடகர் கிஷோர் குமார் அவர்கள், அரசுக்கு வெண்சாமரம் வீசிப் புகழ்ந்துபாட மறுத்தார் என்பதால், அவர் மீது தடை விதிக்கப்பட்டது. வானொலியில் அவர் நுழைவிற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பல முயற்சிகள், ஆயிரக்கணக்கான கைதுகள், இலட்சக்கணக்கான மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளுக்குப் பிறகு பாரத நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் மீதிருந்த நம்பிக்கை சற்றுக்கூட விலகவில்லை.

எதேச்சதிகாரம் தோல்வி
பாரத நாட்டைச் சேர்ந்த நாமனைவரும், பல நூற்றாண்டுகளாகவே ஜனநாயக வழிமுறைகளின்படி வாழ்ந்து வருகிறோம், ஜனநாயக உணர்வு என்பது நம்முடைய நாடிநரம்புகளில் ஊறியிருக்கிறது என்பதால், இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ ஜனநாயகம் தான். பாரத நாட்டு மக்கள் ஜனநாயக வழிமுறைப்படி அவசரநிலையை அகற்றி, மீண்டும் மக்களாட்சியை நிறுவினார்கள். எதேச்சாதிகார மனோநிலையை, எதேச்சாதிகார இயல்பினை, ஜனநாயக வழிமுறைகளின்படி தோற்கடித்த இப்படிப்பட்ட எடுத்துக்காட்டு என்பது உலகிலே வேறு எங்குமே இல்லை.

சாட்சியமாக நான்...
அவசரநிலையின் போது நாட்டுமக்களின் போராட்டத்திற்குச் சான்றாக இருந்த, உடனிருந்து போராடிய பெரும் பேறு எனக்கும் கிடைத்தது - மக்களாட்சியின் ஒரு படைவீரன் என்ற முறையிலே. இன்று, தேசம் தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டினை, அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வரும் வேளையில், அவசரநிலையின் போது நிலவிய பயங்கரமான சூழ்நிலையை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது. இனிவரும் தலைமுறையினரும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications