இஸ்லாமியர்களை மட்டும்தான் என்.ஐ.ஏ. டார்கெட் செய்கிறதா? வைகோ கேள்விக்கு மத்திய அரசு சொன்ன பதில் இது!
டெல்லி: தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. என்பது ஒரு சமூகத்தினரை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறதா? என நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பினார். தேசிய புலனாய்வு ஏஜென்சியானது பல்வேறு பயங்கரவாத வழக்குகளை கையாண்டு வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தேசிய புலனாய்வு ஏஜென்சிகள் தொடர்பாக வைகோ கேள்வி எழுப்பி இருந்தார்.
தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து குற்றம் சாட்டுகிறதா? என்று வைகோ கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-(அ) கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு உட்பட, தற்போது தேசிய புலனாய்வு முகமை (NIA) கையாளும் வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? (ஆ) ஆண்டுக்கு ஆண்டு வழக்குகள் அதிகரித்துள்ளதா? அப்படியானால், அதற்கான காரணங்கள் என்ன?
(இ) தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்ட சமூகங்களை குறிவைப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதா? (ஈ) அப்படியானால், எந்த ஒரு சார்பும் இல்லாமல் வழக்குகளைக் கையாள முகமை மேற்கொண்ட முயற்சிகள் என்ன? (உ) கடந்த மூன்று ஆண்டுகளில், தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணைகளில் எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்து. மற்றும் எத்தனை வழக்குகள் விடுவிக்கப்பட்டது. அதன் விவரங்கள் யாவை?
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில்: (அ) 02.12.2022 நிலவரப்படி, தேசிய புலனாய்வு முகமை கோவை குண்டுவெடிப்பு வழக்கு உட்பட 497 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. (ஆ) ஆண்டுக்கு ஆண்டு தேசிய புலனாய்வு முகமையின் வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணம், மேம்படுத்தப்பட்ட திறன், புதிய கிளை அலுவலகங்கள், மனித கடத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல், சைபர்-பயங்கரவாதம் மற்றும் வெடி பொருள்கள் சட்டம் -1908 ஆகியவை, தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் -2008 பட்டியல் 2019 இல் விரிவுபடுத்தி இருக்கிறது.
(இ) முதல் (உ) இல்லை. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி நாட்டுடனான நட்புறவு, பன்னாட்டு ஒப்பந்தங்கள், தொடர்புகள் போன்றவற்றை அதன் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதும், வழக்காடுவதும் தேசிய புலனாய்வு அமைப்பின் செயலாகும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு ஏன் சரிந்தது? வைகோ கேள்வி
தேசிய/ சர்வதேச தாக்கங்கள் கொண்ட தீவிர வழக்குகளை எந்த ஒரு சார்பு அல்லது பாரபட்சமும் இல்லாமல் விசாரிப்பதற்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும். 2019 ஆம் ஆண்டு முதல் 02.12.2022 வரை 67 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 65 வழக்குகளில் தண்டனையும், 02 வழக்குகளில் விடுதலையும் பெறப்பட்டுள்ளது என்பதிலிருந்து தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தெரிகிறது.இவ்வாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரானது அடுத்த வாரம் வரை நடைபெற இருந்தது. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற இந்த கூட்டத் தொடரில் சீனா விவகாரம்தான் முதன்மையாக இருந்தது. இந்த பிரச்சனையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நாடாளுமன்ற இரு சபைகளும் இன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.