இறுதிக்கட்டத்தை எட்டிய மிஷன் ஆம் ஆத்மி.. அடுத்தடுத்து காலியாகும் தலைகள்.. மொத்தமாக கட்சிக்கே ஆபத்து?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை மொத்தமாக முடக்கும் பாஜகவின் மிஷன் ஆம் ஆத்மி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தேசிய அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த லோக்சபா தேர்தலுக்கு இடையே, டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி தலைவர் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் கூறியிருந்தனர். அதேபோல் அவர் கைது செய்யப்பட்டார்.
அதிர்வலைகள்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
குறிப்பாக, பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிர்வுகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது. கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில், கெஜ்ரிவாலின் கைதை தொடர்ந்து அடுத்த கைது எந்த மாநிலத்தில் இருக்கும் என்கிற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அவர் தற்போது ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் ராஜினாமா: இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் நேற்று தனது பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) உறுப்பினர் பொறுப்பு இரண்டிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். கட்சி ஊழல் கட்சியாக மாறிவிட்டதாக புகார் வைத்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இவரும் அமலாக்கத்துறை மூலம் குறி வைக்கப்பட்டவர்தான். நவம்பர் 2023 இல் சுங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் திஆனந்தின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் (ED) சோதனை நடத்தியது. சுங்கம் தொடர்பான பணமோசடி புகாரில் ₹ 7 கோடிக்கு மேல் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது.
அவர் மேற்கொண்ட இறக்குமதியில் தவறான அறிவிப்புகள் இருப்பதாகவும், இதன் மூலம் சுங்க முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மிஷன் ஆம் ஆத்மி: இப்படிபட்ட நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியை மொத்தமாக முடக்கும் பாஜகவின் மிஷன் ஆம் ஆத்மி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தேசிய அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களில் மேலும் பல ஆம் ஆத்மி தலைவர்கள் கைதாகலாம் அல்லது ராஜினாமா செய்யலாம். இவர்கள் எல்லாம் பெரும்பாலும் பாஜகவில் இணைய வாய்ப்புகள் உள்ளன. ஆம் ஆத்மியை மொத்தமாக முடக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்று தேசிய அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications