மோடியின் மாஸ்டர் ப்ளான்! 25 வருடத்துக்கு பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக உருவாக்க திட்டம்! "ஸ்கெட்ச்"
டெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாபை தவிர்த்து, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது.
கடந்த 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இருக்கிறது.
பாஜக வென்ற ஒரு மாநிலங்களில் கூட பதவியேற்பு விழா நடைபெறவில்லை. பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்ற தகவலையும் பாஜகவினர் வெளியிடவில்லை.

அமைச்சர்களை தேர்வு செய்யும் மோடி
பாஜகவின் இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. மாநிலங்களில் வெற்றிபெறும் தேசியக் கட்சிகள் மாநில அமைச்சர்களை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் மாநில தலைமைக்கே வழங்கும். ஒரு சில பரிந்துரைகள் மட்டுமே தேசிய தலைமையால் வழங்கப்படும். ஆனால், இம்முறை 4 மாநிலங்களில் வென்ற பாஜக எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் தேசிய தலைமை கேட்டுள்ளது. அதை வைத்து பிரதமர் மோடி தலைமையிலான குழு மாநில அமைச்சர்களை நேரடியாக தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு
அதன்படி வயது குறைவான எம்.எல்.ஏக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை எம்.எல்.ஏக்களுக்கு 4 மாநில அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க பாஜக தலைமை முடிவு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே 4 மாநில அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 மக்களவை தேர்தலுக்கான திட்டம்
நாட்டிலேயே அதிக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசமே மக்களவைத் தேர்தல் முடிவில் பெரும்பங்கு வகிக்கிறது. இங்கு அனைத்து சாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம் பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்று மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற பாரதிய ஜனதா தலைமை திட்டம் தீட்டியுள்ளது. அதேபோல் பாஜக எம்.பிக்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் விழாத 100 பூத்துகளை அடையாளம் காட்டவும் அக்கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

அடுத்த 25 ஆண்டுகாலத்துக்கான மோடியின் திட்டம்
4 மாநில அமைச்சரவையில் இம்முறை அதிகளவிலான படித்த இளைஞர்களையும் பெண்களையும் இடம்பெற செய்ய பிரதமர் மோடி பாஜக தலைமையிடம் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜகவில் அடுத்த 25 ஆண்டுக்கான அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கி கட்சியை அசைக்க முடியாத சக்தியாக நிலைக்க செய்யவும் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு இருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.

மூத்த தலைவர்கள் இம்முறை அமைச்சர் இல்லை
4 மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் முறையாக செயல்படாத தலைமைக்கு கட்டுப்படாதவர்களுக்கும் இம்முறை அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்ற முடிவில் அக்கட்சி திட்டவட்டமாக உள்ளது.

மார்ச் 21 ஆம் தேதி யோகி முதல்வராக பதவியேற்பு?
உத்தரப்பிரதேசத்தில் இம்முறை யோகி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட 20 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மீதம் உள்ள இடங்களில் மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏக்களுக்கும், பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அரசு ஊழியர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி பார்த்தால் மார்ச் 21 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2 வது முறையாக பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications