இப்போது நான் ஏன் ஐரோப்பா செல்கிறேன் தெரியுமா.. ஜெர்மனி உட்பட 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்யவுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்,
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குத் தனது சுற்றுப் பணம் மேற்கொள்கிறார். ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி மே 2ஆம் தேதி பெர்லினுக்குச் செல்கிறார்.
வரும் மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் அங்குச் செல்கிறார். அவர் பிரதமர் மோடி இரண்டாவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க பாரிஸ் நகருக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐரோப்பியப் பிராந்தியம் பல சவால்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் நான் ஐரோப்பா செல்கிறேன். எனது செயல்பாடுகள் மூலம், அமைதி மற்றும் செழிப்புக்கான இந்தியாவின் தேடலில் முக்கியமான கூட்டணி நாடாக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் உடனான ஒத்துழைப்பின் உணர்வை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜெர்மனி அதிபர் உடனான சந்திப்பில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் உறவை மேம்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்தியா-ஜெர்மனி நாடுகளுக்கு இடையேயான 6ஆவது மாநாட்டை நடைபெறும். இந்தியா ஜெர்மனியுடன் மட்டுமே நடத்தும் தனித்துவமான மாநாடு இதுவாகும். பல மத்திய அமைச்சர்கள் ஜெர்மனி அமைச்சர்களுடன் இதில் ஆலோசனை நடத்துவார்கள்.
கொரோனா பரவலின்போது மோடி செய்த காரியம்... நோபல் பரிசே தரலாம் என புகழ்ந்த மும்பை பங்குச்சந்தை தலைவர்
பிராந்திய மற்றும் உலகளாவிய சம்பவங்கள் குறித்து அதிபர் ஸ்கோல்ஸுடன் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளேன். இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நீண்டகால வர்த்தக உறவுகள் என்பது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கியமானதாக உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்
ஐரோப்பா கண்டனம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தாய்வீடாக உள்ளது. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான உறவில் புலம்பெயர்ந்தவர்கள் முக்கிய தூணாக உள்ளனர். எனவே, எனது இந்தப் பயணத்தின் மூலம் நான் ஐரோப்பாவில் இருக்கும் நமது சகோதர சகோதரிகளைச் சந்திக்கிறேன்.
ஜெர்மனி நாட்டில் இருந்து டென்மார்க் நகருக்குச் செல்கிறேன். அங்கு இரு தரப்பிற்கும் இடையே நடைபெறும் வட்ட மேஜை மாநாட்டிலும் நான் கலந்து கொள்கிறேன். அங்குள்ள இந்திய மக்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். எனது இந்த பயணத்தில் 2வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் டென்மார்க் மட்டுமின்றி, ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலை, காலநிலை மாற்றம், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆர்க்டிக் பிராந்தியத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பு போன்ற விஷயங்களில் உச்சி மாநாடு கவனம் செலுத்தும்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நான் இந்தியா திரும்பும் போது, எனது நண்பரான பிரான்ஸ் அதிபர் மக்ரோனை சந்திக்க நான் பாரீஸில் செல்கிறேன். அதிபர் தேர்தலில் வென்று 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவரை வாழ்த்த செல்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புக் காட்டுவதாக இந்தச் சந்திப்பு அமையும். இந்தச் சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம்" என்றார்.
இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது. 3 நாள் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி,இந்த 3 நாட்களில் 25 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.