கூகுள் நிறுவனத்துக்கு ஷாக்.. தடை விதிக்க முடியாது.. 133 கோடி அபராதம் செலுத்த NCLAT அதிரடி உத்தரவு!
டெல்லி : கூகுள் நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில், ரூ. 1333 கோடியில் 10 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் இந்திய போட்டி ஆணையம் விதித்த அபாரத்துக்கு எதிராக கூகுள் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் 2 நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்திய போட்டி ஆணையத்தின் முறையீடுகளையும் கேட்க வேண்டும் என்றும், வரும் பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் இந்திய போட்டி ஆணையம் தனது பதிலை தாக்கல் செய்யவும் தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கூகுளுக்கு அபராதம்
உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு துறையில் தனது ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்தன. கூகுள் நிறுவனத்தின் செயலிகளான கூகுள் சர்ச், க்ரோம், யூடியூப் ஆகியவற்றை கூகுள் நிறுவனம் செல்போனில் முன்கூட்டியே நிறுவி (Pre Installed) விற்பனைக்கு அனுப்புவதால் பிற போட்டியாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் பிற நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட்டு கூகுள் நிறுவனம் மட்டுமே பெரும்பான்மையான ஆதாயம் அடைகிறது, இது ஆரோக்கியமான போட்டியை வணிகத்தில் ஏற்படுத்துவதில்லை என்று புகார் எழுந்தது
சிசிஐ உத்தரவு
இதைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் தனது ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக இந்திய போட்டி ஆணையம் (CCI) கூகுள் நிறுவனத்துக்கு 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இந்த அபாரதத் தொகையை செலுத்தி, நிதி பரிவரித்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறினால் கூடுதலாக அபராதத்தை செலுத்த வேண்டியதிருக்கும் என எச்சரித்தது.
மேல்முறையீடு
இந்திய போட்டி ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLAT) கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கூகுள் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். சிசிஐ உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும், கூகுள் நிறுவனம் விதிமுறைகளை மீறியதற்கு ஆவணங்கள் இல்லை என்று சிங்வி வாதத்தை முன்வைத்தார். சிசிஐ விதித்த உத்தரவுக்கு முறையாக விசாரிக்காமல் உடனடியாக எந்தத் தடையையும் விதிக்க தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
133 கோடி
அதேசமயம், நீதிபதிகள் ராகேஷ் குமார், அலோக் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இந்திய போட்டி ஆணையத்தின் முறையீடுகளையும் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் இந்திய போட்டி ஆணையம் தனது பதிலை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்திய போட்டி ஆணையம் விதித்த 1337.76 கோடி ரூபாய் அபராதத் தொகையில் 10% தொகையை செலுத்தும்படி கூகுளுக்கு தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.