ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்... சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள்.. எளிதில் வெல்லும் பாஜக கூட்டணி
டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முடியாமல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திணறுகின்றன. இருப்பினும் ராஜ்யசபா எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் பாஜக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் ஹரிவன்ஷ் துணைத் தலைவர் தேர்தலில் எளிதாக வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.
ராஜ்யசபாவின் துணைத் தலைவராக இருந்த பிஜே குரியனின் பதவிக் காலம் 2018-ல் முடிவடைந்தது. இதனையடுத்து ஜேடியூ எம்.பி., ஹரிவன்ஷ் நாராயண்சிங், ராஜ்யசபா துணைத் தலைவரானார். அவரது எம்.பி. பதவிக் காலம் கடந்த ஏப்ரலில் முடிவடைந்தது.
இதனால் ராஜ்யசபா துணைத் தலைவர் பதவி காலியானது. ஏற்கனவே 2019 தேர்தலுக்குப் பின்னர் லோக்சபா துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. கடந்த கால மரபுகளின் படி எதிர்க்கட்சிகளுக்குத்தான் இரு பதவிகளும் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் தம்பிதுரை 2 முறை லோக்சபா துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
பீகார் தேர்தல்... மருத்துவமனையில் பாஸ்வான்... கூட்டணி குறித்து மகன் சிராக் முடிவெடுக்க அதிகாரம்!
திருச்சி சிவாவை நிறுத்த விரும்பிய காங்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14-ந் தேதி தொடங்குகிறது. அப்போது ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு கே. சுரேஷ், ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு திமுகவின் திருச்சி சிவாவை வேட்பாளர்களாக முன்வைக்க விரும்பியது. காங்கிரஸ் கட்சியின் சுரேஷ், 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தரும் என்பது காங்கிரஸ் நம்பிக்கை.
எதிர்க்கட்சி வேட்பாளர் மனோஜ் ஜா
திருச்சி சிவாவை ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்த திமுக தலைமை ஒப்புதல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் திருச்சி சிவாவுக்கு ஆதரவு தர தயக்கம் தெரிவித்திருக்கின்றன. இதனால் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகாரின் மனோஜ் ஜாவை ராஜய்சபா துணைத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங். அவர் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
என்டிஏ வேட்பாளராக ஹரிவன்ஷ்
இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக ஜேடியூ எம்.பி. ஹரிவன்ஷ், ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். 2018-ம் ஆண்டு ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் ஹரிபிரசாத்தை 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் ஹரிவன்ஷ்.
ஹரிவன்ஷ்க்கு அமோக ஆதரவு
245 எம்.பிக்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 113 எம்.பிக்கள் உள்ளனர். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பாஜக கூட்டணியின் ஹரிவன்ஷை ஆதரிக்கக் கூடும். இந்த கட்சிகளையும் சேர்த்தால் மொத்தம் 140 எம்.பிக்களின் ஆதரவு, பாஜக கூட்டணி வேட்பாளருக்குக் கிடைக்கும்.
பாஜக அணி வேட்பாளர் வெற்றி உறுதி
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் மொத்தம் 91 எம்.பி.க்கள்தான் ராஜ்யசபாவில் உள்ளனர். பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மியும் ஆதரித்தாலும் கூட 95 எம்.பிக்கள் வாக்குகள்தான் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு கிடைக்கும். இதனால் ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.