பிரதமர் மோடி - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு.. நீட் விலக்கு முதல் காவிரி வரை கோரிக்கைகள் முன்வைப்பு!!
டெல்லி: நீட் விலக்கு தொடங்கி காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ளார்.
டெல்லி சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்தினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் உடல்நலன் குறித்து விசாரித்த பிரதமர் மோடி, உடல் நலனை கவனித்துக் கொள்ளுமாறு தான் கேட்டுக்கொண்டதை அவரிடம் தெரிவிக்குமாறு கூறினார்.
அப்போது, தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் அன்புமணி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய அன்புமணி, அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரிடம் கோரினார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும், ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அன்புமணி. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் அன்புமணியின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications