நெல்லையில் முன்னாள் போலீஸ் எஸ்ஐ படுகொலை.. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
சென்னை: நெல்லையில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் கொலை வழக்கினை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் 4 வாரங்களுக்குள் முறையான விளக்கம் அளிக்குமாறு மாநில டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜாகிர் உசேன் இறப்பதற்கு முன்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி ( வயது 60). ஓய்வு பெற்ற முன்னாள் காவல் உதவி ஆய்வாளர். இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்காக அவர் பள்ளிவாசலில் தொழுகை செய்தார். தொழுகை செய்துவிட்டு வெளியே வந்த போது திடீரென மர்ம நபர்கள் சிலர் இவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர்.

இறப்பதற்கு முன்பு வீடியோ
நடு ரோட்டில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவர் கொலை தொடர்பாக இரண்டு பேர் போலீசில் சரணடைந்தனர்.
அதாவது ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் டவுன் அருகே உள்ள தைக்கா ஒன்றின் அறங்காவலராக இருந்து வந்தார். தைக்கா அருகில் இருக்கும் நிலம் தொடர்பாக தவுபிக் என்பவருடன் பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரணமாக தவுபிக்கை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஜாகிர் உசேனின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் போலீசார், இந்த கொலை வழக்கில் தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் அதிரடியாக சுட்டுப்பிடித்து கைது செய்தனர். மேலும் 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே அவரது மனைவி தலைமறைவாகி உள்ளார். அவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜாகிர் உசேன் இறப்பதற்கு முன்பு தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என் வீட்டை சுற்றி அவ்வப்போது ஆட்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியும் கொலை செய்யப்படுவேன்" என்று அந்த வீடியோவில் ஜாகிர் உசேன் கூறியிருந்தார்.
தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
கொலை செய்யப்படுவதற்கு முன்பே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டிருந்தும் போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்காமல் அலட்சியமாக இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஜாகிர் உசேன் கொலை வழக்கினை தாமாக முன் வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க தொடங்கியுள்ளது.
முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் கொலை வழக்கினை தாமாக முன்வந்து விசாரணை செய்யும் தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் முறையான விளக்கம் அளிக்குமாறு மாநில டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஜாகிர் உசேன் இறப்பதற்கு முன்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜாகிர் உசேன் மகன் வீடியோ
முன்னதாக ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "மர்ம நபர்களால் தொடர்ந்து நாங்கள் கண்காணிக்கப்படுகிறோம். இன்று ஹெல்மெட் அணிந்து வந்த நபர் எங்களது வீட்டை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த டார்கெட் நான் தானா என நினைக்க தோன்றுகிறது. சாவை நினைத்து நாங்கள் பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம்.
என் அப்பாவின் உடலை வாங்க மாட்டோம் என நிபந்தனை விதித்ததாலேயே முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தார்கள். காவல்துறையில் ஒரு சில அதிகாரிகள் இன்றும் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது" என கூறியிருதார். இதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications