மாட்டை தடுக்கணும்.. தண்டவாளத்துக்கு வேலி போடும் ரயில்வே துறை.. 'ஐடியாவை' கலாய்க்கும் நெட்டிசன்கள்
டெல்லி: ரயில் தண்டவாளத்தில் மாடுகள் குறுக்கே வருவதை தடுக்க வேலி அமைக்கப்படும் என்று ரயில்வேத்துறை அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.
நாட்டின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களின் குறுக்கே கால்நடைகள் வரக்கூடாது என்பதற்காக சுமார் 1,000 கிமீ நீளத்தில் வேலி அமைக்கப்பட இருக்கிறது.
இந்த பணிகள் முழுமை பெற 5-6 ஆண்டுகள் ஆகலாம் என்று ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.

பாதிப்பு
இந்திய ரயில்வேதுறையை தரம் உயர்த்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட 'வந்தே பாரத்' ரயிலுக்கும் எருமை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கும் ஏழாம் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட 'வந்தே பாரத்' சேவை கால்நடைகளால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி நாடு முழுவதும் இயங்கும் பல ரயில்களிலும் கால்நடைகள் அடிப்பட்டு உயிரிழப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் முதல் ஒன்பது நாட்களில் 200 ரயில்கள் மாடு குறுக்கே வந்ததால் இடையில் நின்று சென்றிருக்கிறது.

கால்நடைகள்
ஓராண்டில் இப்படியாக 4,000 ரயில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இதற்கு நிரந்தர தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என யோசித்த ரயில்வே துறை, தண்டவாளத்தை சுற்றி 'வேலி' அமைக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி வந்தே பாரத் இயங்கும் வழித்தடங்களிலும், பிரதான ரயில் போக்குவரத்து உள்ள பகுதிகளிலும் 1,000 கி.மீ நீளத்திற்கு இந்த வேலிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், கால்நடைகள் மட்டுமல்லாது மனிதர்களும் தண்டவாளத்தை விட்டு விலகி இருப்பதை உறுதி செய்வதுதான் என்று ரயில்வேத்துறை கூறியுள்ளது.

வேலி
அதன்படி டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் முதற்கட்டமாக இந்த வேலிகள் அமைக்கப்பட உள்ளன. வட மத்திய ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் ரயில்கள்தான் இந்த சிக்கல்களை அதிக அளவில் எதிர்கொள்கிறது என்பதால் முதலில் இந்த மண்டலத்தில் வேலிகள் அமைக்கப்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார். அதாவது, ஜான்சி கோட்டத்தில் லட்சுமிபாய் - குவாலியர், பிரயாக்ராஜ் பிரிவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் - பிரயாக்ராஜ், மொரதாபாத் பிரிவில் ஆலம் நகர் - ஷாஜஹான்பூர் மற்றும் லக்னோ பிரிவில் ஆலம் நகர் - லக்னோ இடையே இந்த வேலிகள் முதல்கட்டமாக அமைக்கப்படும்.

செலவு
ஆனால் இது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது, வேலி அமைக்கும் செலவில் ரயில் என்ஜின்களை மேம்படுத்தலாமே என்றும் யோசனை தெரிவித்து வருகின்றனர். திமுக சமூக ஊடக பிரிவின் துணை தலைவர் 'இசை' இது குறித்து, "What will be the cost for 1000km fence? VS What will be the cost for the strengthening the engine?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். உலகின் மீக நீண்ட ரயில் வழித்தடங்களை கொண்டுள்ள இந்திய ரயில்வே முழுமைக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு ஆகும் செலவு மிக அதிகமானதாக இருக்கும் என பலர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications