புதிய நாடாளுமன்றத்தின் 'அகண்ட பாரதம்' வரைபடத்தில் நேபாளம்- அடுத்த சர்வதேச பஞ்சாயத்து ரெடி!
டெல்லி: பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய நாடாளுமன்றத்தின் அகண்ட பாரதம் வரைபடத்தில் நேபாளம் நாடும் இணைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது. டெல்லியில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் முகாமிட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகளுக்கு இடையே பிரதமர் மோடி கடந்த 28-ந் தேதி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. நாட்டின் ஜனாதிபதிதான் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்; அவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது என்பதால் விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில், தமிழ்நாட்டு ஆதீனங்கள் சிறப்பிக்கப்பட்டனர். மேலும் 1947-ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் ஒன்று லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடியால் நிறுவப்பட்டது.
இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அகண்ட பாரதம் படம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, இந்தப் படத்தில் நேபாள நாடும் இணைக்கப்பட்டுள்ளது, இதற்கு நேபாள நாட்டு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் லும்பினி, கபிலவஸ்தும் இந்த அகண்ட பாரத வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. புத்தர் பிறந்த இடம் லும்பினி, புத்தரின் இளம்பிராய நாட்களுடன் தொடர்புடைய கபிலவஸ்து.
தற்போது நேபாள நாட்டின் பிரதமர்புஷ்ப கமல் தாமல், இந்தியாவில் 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ளார். இந்த நிலையில் அகண்ட பாரதம் வரைபடத்தில் நேபாளத்தின் லும்பினி, கபிலவஸ்து சேர்க்கப்பட்டிருப்பதற்கு இந்திய அரசிடம் நேரில் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்; இதனை மாற்றி அமைக்க வேண்டும் என நேபாள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications