புதிய வருமான வரி சட்டம் ஏன் முக்கியம்? பழைய சட்டத்தை விட இது பெஸ்ட் ஏன்? 10 முக்கிய பாயிண்டுகள்
டெல்லி: புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டால் மிக முக்கிய மாற்றமாக இருக்கும். இந்த புதிய வருமான வரி மசோதா ஏன் முக்கியம்.. இதில் உள்ள முக்கிய பாயிண்டுகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
தற்போதுள்ள பழைய வருமான வரி சட்டம் கொண்டு வரப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் உள்ள முக்கிய பாயிண்டுகள் குறித்து நாம் பார்க்கலாம்.

ஏன் முக்கியம்:
1) இந்த புதிய வருமான வரி மசோதாவின் முக்கிய நோக்கமே இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எளிமையான வார்த்தைகள் தான். இது பொதுமக்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் என இரு தரப்பிற்கும் உதவும். இதன் மூலம் தேவையில்லாத வழக்குகள் குறைக்கப்படும். அதாவது தற்போதுள்ள சட்டத்தில் உள்ள வார்த்தைகள் குழப்பத்தையே ஏற்படுத்தும் நிலையில், புதிய சட்டத்தில் அந்த சிக்கல் தீர்க்கப்படும்.
2) மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த புதிய மசோதாவில் தனிநபர்கள், பிஸ்னஸ்கள் தொண்டு நிறுவனங்கள் என ஒவ்வொரு தரப்பிற்கும் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
3) பழைய வருமான வரி சட்டம் 536 பிரிவுகள் 1647 பக்கங்களைக் கொண்டதாக உள்ள நிலையில், புதிய வருமான வரி சட்டம் 298 பிரிவுகள் 622 பக்கங்களை மட்டுமே கொண்டதாக இருக்கும். அனைத்து தரப்பினரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த சட்டம் அமைந்திருக்கும்.
வரி மாற்றங்கள்:
4) ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் மற்றும் நிலையான விலக்கு ரூ.75,000 என சம்பளதாரர்களுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அத்துடன் புதிய திருத்தப்பட்ட வரி அடுக்குகள் உள்ளிட்ட அறிவிப்புகள் இருந்த நிலையில், அவை அனைத்துமே புதிய வருமான வரி சட்டத்திலும் இருக்கும்.
5) பழைய வருமான வரி சட்டத்துடன் ஒப்பிடும் போது புதிய மசோதா 25-30 சதவீதம் குறைவாகவே இருக்கிறது. இது சர்ச்சைகளைக் குறைக்கும் மேலும் வரி செலுத்துவோர் தங்களுக்கான உரிமைகளை ஈஸியாக புரிந்து கொள்ளவும் உதவும். வருமான பழைய சட்டத்தில் செக்ஷன் 10 மற்றும் 80C முதல் 80U ஆகியவற்றில் விலக்குகள் இருக்கும். அதிலும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலக்கெடு நீடிப்பு:
6) மேலும், மிஸ்ஸான ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அளவு இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தும்போது எதாவது சிக்கல் ஏற்பட்டால் அதைச் சரி செய்யவும் இது உதவும்.
7) மேலும், 'assessment year' என்ற ஒன்றே நீக்கப்பட்டும்.. மொத்தமாக அனைத்தும் Tax Year என்பதற்குள் கொண்டு வரப்படும். வரி வருமான தாக்கல் செய்ய இது பெரியளவில் உதவும்.
டிஜிட்டல் சொத்துக்கள்:
8) இந்த நவீனக் காலத்தில் க்ரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துக்கள் முக்கியமானதாக இருக்கிறது. அவை தொடர்பாகப் பழைய வருமான வரி சட்டத்தில் தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லாத நிலையில், புதிய சட்டத்தில் அது சார்ந்த விளக்கங்களும் தரப்பட்டுள்ளது.
9) பழைய சட்டத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு சில வருமான வரி விலக்குகளை வழங்கியது. ஆனால் அதில் தெளிவான விளக்கங்கள் இல்லாமல் இருந்தது. இந்த புதிய மசோதா, பிரிவுகள் 332 முதல் 355 வரை தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லும் வருமானத்தைத் தெளிவாக விளக்கியுள்ளது.
விரிவான விளக்கங்கள்
10) புதிய மசோதாவில் பிரிவுகள் 11 முதல் 154 வரை, ஸ்டார்ட்அப், டிஜிட்டல் வணிகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை ஆகியவை குறித்த விளக்கங்கள் உள்ளன. மூலதன ஆதாய வரி என்பதிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய சட்டத்தில் மூலதன ஆதாய வரி என்பது ஹோல்டிங் காலத்தைப் பொறுத்து நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடு என இரண்டு வகையில் இருக்கும். அதிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications