இங்கிலாந்தில் மட்டுமல்ல.. பல நாடுகளில் புதிய வகை கொரோனா பரவியிருக்கலாம்- சவுமியா சுவாமிநாதன்
டெல்லி: புதியவகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் பரவியிருக்க கூடும் என்று உலக சுகாதார ஆய்வு அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து அந்த நாட்டுடனான விமானச் சேவைகளை பல ஐரோப்பிய நாடுகள் தடை செய்துவிட்டன.
இந்தியாவும் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தடை செய்வதாக நேற்று அறிவித்தது. இந்த நிலையில்தான், சவுமியா சுவாமிநாதன் இவ்வாறு ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
லண்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா.. புதிய வகை கொரோனாவா?.. சுகாதாரத் துறை ஆய்வு
பிற நாடுகள்
பிரிட்டன் நாட்டில், கொரோனா தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் அவர்கள் புதிய வகை வைரசை கண்டுபிடித்திருக்க கூடும். ஆனால் பிற நாடுகளிலும், இதேபோன்ற வைரஸ் அல்லது உருமாறிய வைரஸ் பரவியிருக்க வாாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது என்று சவுமியா கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து மட்டுமல்ல, இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்தில், இதேபோன்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சமீபத்தில் இங்கிலாந்து தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவில் வேறு மாதிரியான கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்தது.
வழக்கமான நடைமுறை
இதுகுறித்து சவுமியா மேலும் கூறுகையில், வைரஸ்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்தான். அதில் எது ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் வகையோ, அது பரவும். இதுவும் அப்படியான ஒரு மாறுபாடாகத்தான் இருக்க முடியும். புரத அமைப்பை மாற்றிக்கொண்டு, தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாற்றம் பெற்றிருக்கும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து.
தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியுமா?
புதிய வகை கொரோனா வைரசின் தன்மையை அறிவதற்காக ஆய்வுகளை செய்து வருகிறோம். இன்னும் இரண்டு வாரங்களில், அதுகுறித்த உண்மை நிலை தெரியவரும். இப்போதைக்கு அந்த வைரசையும் தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் எங்கள் கருத்து.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
புதிய வகை வைரசாக இருந்தாலும் கூட, ஏற்கனவே எடுக்கப்படும் நோய் பரவல் தடுப்பு முறைகளான, முகக் கவசம், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற நடைமுறைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றினால் போதுமானது. இதற்காக புதிதாக எந்த நடவடிக்கையும் தேவையில்லை. இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.