டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு வரி போடும் பிளான் இல்லை.. நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்
டெல்லி: டிஜிட்டல் பேமெண்ட் முறைகளுக்கு மத்திய அரசு சார்ஜ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் கொரோனாவுக்கு பின் டிஜிட்டல் பேமென்ட் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் யுபிஐ பேமெண்ட் முறைக்குக் கட்டணம் வசூலிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆட்சியை பிடிக்க கட்சிகள் அறிவிக்கும் இலவசத்திற்கு..அரசு கடனில் மூழ்கணுமா? ஆவேசமான நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
இருப்பினும், அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி உடனடியாக விளக்கம் அளித்துவிட்டது. இந்நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "டிஜிட்டல் பேமெண்ட்டை நாங்கள் பொதுநல சேவையாகவே பார்க்கிறோம். டிஜிட்டல் மயமாக்கல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவுகிறது.
கட்டணம்?
அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை எளிதாக அணுக முடிகிறது. மேலும், தேவைப்படும் வெளிப்படைத்தன்மையும் இதன் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இப்போது தான் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மெல்ல டிஜிட்டல் பேமெண்ட் முறையை நோக்கித் திரும்பி வருகின்றனர். எனவே, இந்த நேரத்தில் டிஜிட்டல் பேமெண்ட் முறைக்குக் கட்டணம் வசூலிக்க முடியாது.
எப்போது
அது எவ்வளவு குறைவான கட்டணமாக இருந்தாலும், இது அதற்கான சரியான நேரம் இல்லை என்றே நினைக்கிறோம். டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அனைவருக்கும் கொண்டு செல்ல தொடர்ச்சியாக முயன்று வருகிறோம். ரிசர்வ் வங்கி இது தொடர்பாக மக்களிடம் கருத்துகளை மட்டுமே கேட்டுள்ளது. அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும்" என்றார்.
கட்டணம் இல்லை
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி மக்களிடம் கருத்துக் கேட்டுள்ள நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இப்போது வரை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பொதுமக்களும் சரி, வணிகர்களும் சரி யுபிஐ பரிவர்த்தனைகளை இலவசமாகவே பயன்படுத்தலாம்.
கட்டணம்
இருப்பினும், இதை நிலை எப்போதும் இருக்க முடியாது. யுபிஐ நிறுவனங்களுக்கு வருமானம் கிடைப்பதை உறுதி செய்யக் கட்டணத்தை அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இது அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரே கட்டணமாக இருக்காமல், தொகைக்கு ஏற்ப வசூலிக்கப்படும் கட்டணமாகவே இருக்கும். அதாவது சிறு தொகை என்றால் குறைவான கட்டணமும், அதிக தொகை என்றால் அதிக கட்டணமும் வசூலிக்கப்படலாம்.
யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை தான் மிகவும் பிரபலமானது. இது ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது அறிமுகப்படுத்தப்பட்டதாகும். RTGS, NEFT போன்ற முறைகளுக்கு வங்கிக் கணக்கு எண், வங்கி எண் என பல்வேறு தகவல்கள் தேவை. ஆனால், மொபைல் எண் இருந்தாலே யுபிஐ முறையில் பணத்தை அனுப்பி விடலாம் என்பதாலேயே இந்த முறை இந்தியாவில் ஹிட் அடித்தது.