'ஊழல்வாதிகள் ஒன்றிணைகின்றனர்' பிரதமர் மோடி விமர்சனம்.. நிதிஷ் குமாரின் பதில் இதுதான்
டெல்லி: ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காக சில அரசியல் கட்சிகள் வெளிப்படையாக முன் வந்து ஒரு குழுவாக ஒருங்கிணைய முயற்சிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மொடி பேசியதற்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பதிலளித்து பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்றே கேரள மாநிலம் சென்றிருந்தார்.
அப்போது அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காக சில அரசியல் கட்சிகள் வெளிப்படையாக முன் வந்து ஒரு குழுவாக ஒருங்கிணைய முயற்சிக்கின்றன என்றார்.
பாஜகவுக்கு எதிராக அணி.. பிரதமர் வேட்பாளர் யாரு? நைசாக நழுவ முயன்ற நிதிஷ்.. இருக்குமாறு கூறிய கேசிஆர்
விழிப்புடன் இருக்க வேண்டும்
இது தொடர்பாக அந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ''ஊழலுக்கு எதிரான தனது அரசாங்கத்தின் நடவடிக்கையால், ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காக சில அரசியல் கட்சிகள் வெளிப்படையாக முன் வந்து ஒரு குழுவாக ஒருங்கிணைய முயற்சிக்கின்றன. கேரள மக்களும் இந்திய மக்களும் இந்த குழுக்களிடம் இருந்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என்று பேசினார்.
நிதிஷ்குமாரை விமர்சிக்கும் வகையில்?
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாபந்தன் கூட்டணி அரசை நிதிஷ்குமார் அமைத்தார். நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பிரதமர் மோடி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நிதிஷ்குமாரை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று பேசியது அமைந்திருந்தது.
பதில் அளிக்க மாட்டேன்
எனவே இது குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், ''ஊழல்வாதிகளை ஏன் யாரும் பாதுகாக்க வேண்டும்?.. பீகாரில் ஊழல்வாதிகளை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்வது கிடையாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், இதற்கெல்லாம் நான் பதில் அளிக்க மாட்டேன்'' என்றர்
எங்கு வேண்டும் என்றாலும் அவர் செல்லலாம்
மேலும் நிதிஷ் குமார் கூறுகையில், ''நான் இந்த விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவர் நாட்டின் பிரதமர். எங்கு வேண்டும் என்றாலும் அவர் செல்லலாம். ஆனால், கேரளாவில் யார் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்'' என்றார். கேரளாவில் இடது சாரிகளின் ஆட்சி நடைபெற்று வருவதை மேற்கோள் காட்டும் வகையில் நிதிஷ்குமார் இவ்வாறு பேசினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில்
மேலும், மோடியை விமர்சித்த நிதிஷ் குமார், ''அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் அனைவர் மீதும் அக்கறை கொண்ட விதம்.. பீகாரில் கூட நான் பல ஆண்டுகள் பணியாற்றும் வாய்பை பெற்றேன். மத்தியில் உள்ளவர்கள் பேசிக்கொண்டே இருக்கலாம். அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை" என்றார்.
3-வது அணி அமைப்பது..
நேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் ஆகியோர் சந்தித்து பேசியது, இதேபோல் பாஜகவுக்கு எதிராக 3-வது அணி அமைப்பது தொடர்பான திட்டத்துடன் அரசியல் தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து வருவது போன்ற சூழ்நிலையில், பிரதமர் மோடி இந்த சந்திப்புகளை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.