அப்பாடா...! இனி கொரோனா காலர் டியூன் வராதாம் - சுகாதாரத்துறைக்கு பறந்த கடிதம்
டெல்லி: செல்போன் அழைப்புகளுக்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருந்த கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனை கைவிட மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு, கொரோனாவை தடுக்கவும் அதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டது.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி முன் தோன்றி கொரோனா விழிப்புணர்வுக்காகவும், சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையிலும், பாத்திரங்கள், இசைக் கருவிகளை கொண்டு ஒலி எழுப்புமாறு கூறினார். அடுத்த சில நாட்களில் அனைவரும் சில நிமிடங்கள் விளக்குகளை அனைத்துவிட்டு மீண்டும் ஒளியேற்றுமாறு அறிவுறுத்தினார்.

காலர் டியூன் மூலம் கொரோனா விழிப்புணர்வு
அந்த வரிசையில்தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்திய மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு முறை கால் செய்யும்போதும் சுமார் ஒரு நிமிடம் கொரோனா குறித்த ஆடியோ காலர் டியூனாக ஒலிக்க ஏற்பாடு செய்தது. அந்தந்த சூழலுக்கு ஏற்ப இந்த காலர் டியூன்கள் மாற்றப்பட்டன.

கொரோனா தடுப்பூசி காலர் டியூன்
இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டவுடன் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலர் டியூன் மாற்றப்பட்டது. அதன் பின்னர், 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து காலர் டியூன் மாற்றப்பட்டது.
மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இந்த காலர் டியூனால் தொடக்கத்தில் மக்கள் விழிப்புணர்வு அடைந்தாலும் நாளாக நாளாக இதனால் கடும் தொந்தரவுக்கு ஆளாகினர். இந்த காலர் டியூன்களை கேட்காமல் தவிர்ப்பது எப்படி என்று கூட கூகுளிலும் யூடியூபிலும் வீடியோக்களை தேடினார்கள் பொதுமக்கள்.

அவசர அழைப்புகள் கூட தாமதம்
குறிப்பாக செல்போன்களை மையமாக வைத்து தொழில் செய்து வரும் டெலிவரி ஊழியர்கள், மார்க்கெட்டிங், கொரியர் ஏஜெண்டுகள், போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பலரும் இன்னல்களுக்கு ஆளாகினார்கள். அவசரமாக ஒரு போன் செய்தால் கூட ஒரு நிமிடம் தாமதித்து இதை கேட்டுவிட்டுதான் பேச வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டதால், இதனை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

சுகாதாரத்துறைக்கு பறந்த கடிதம்
இந்த சூழலில்தான் கொரோனா காலர் டியூன் சேவையை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைக்கு தொலைதொடர்புத்துறை கடிதம் எழுதி இருக்கிறது. அதில், 2 ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனை நிறுத்த வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அழைப்புகள் இணைப்பதில் தாமதம்
இதுதொடர்பாக இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கம் (COA) மற்றும் மொபைல் சந்தாதாரர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை தொலைதொடர்புத்துறை மேற்கோள் காட்டியுள்ளது. அந்த கடிதத்தில் "21 மாதங்களாக ஒலித்த இந்த காலர் டியூன் அதன் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால், தற்போது அது அவசர அழைப்புகளை தாமதப்படுத்துவதுடன் விலைமதிப்பற்ற அலைவரிசையை வீணடிக்கிறது." எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications