ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்ட அப்பார்ட்மெண்ட்வாசி.. வெளுத்து வாங்கிய செக்யூரிட்டி பணியாளர்கள்!
டெல்லி: நொய்டா செக்டர் 100 -ல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் செக்யூரிட்டி பணியாளர்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்காக தங்கள் சக ஊழியர் ஒருவரைத் தாக்கிய குடியிருப்புவாசியை லத்தியால் சரமாரியாக தாக்கினார். ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியை அடுத்த நொய்டா செக்டார் 100 என்ற பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் ஒருவர் செக்யூரிட்டி பணியாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செக்யூரிட்டி பணியாளர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நொய்டா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நொய்டாவில் நடந்தது
என்ன நடந்தது? டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் , அடுக்குமாடி குடியிருப்புவாசி, அங்குள்ள ஒரு அறையின் சாவியை கேட்கிறார். ஆனால் குடியிருப்புவாசிகளுக்கு அந்த சாவியை தர முடியாது என்று செக்யூரிட்டி ஒருவர் பதில் அளித்துள்ளார். இதனால் குறிப்பிட்ட நபர் ஆத்திரம் அடைந்து செக்யூரிட்டி பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த லத்தியை எடுத்து செக்யூரிட்டி பணியாளரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனிடையே அந்த குடியிருப்புவாசியின் மகனும் வந்து குறிப்பிட்ட செக்யூரிட்டி பணியாளரை தாக்க தொடங்கி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக செக்யூரிட்டி பணியாளர்கள் அங்கு வந்து அதை தடுத்து நிறுத்தியதுடன், குடியிருப்புவாசியையையும் அவரது மகனையும் அடித்து வெளுக்க தொடங்கினர்.

அடி உதை
குறிப்பாக சாவியை கேட்டு வம்பிழுத்து சக ஊழியரை தாக்கிய குடியிருப்புவாசியை மொத்தமாக சூழ்ந்து கொண்டு செக்யூரிட்டி பணியாளர்கள் தாக்க தொடங்கினர். ரத்தம் சொட்ட சொட்ட அவர் கதறினார். அவரது மகனுக்கும் அடி விழுந்தது. இதனிடையே இதை வீடியோவாக படம் பிடிக்குமாறும், ஊடகங்கள், காவல்துறையிடம் காட்டுமாறும் அந்த குடியிருப்புவாசி கதறினார்.

நடவடிக்கை பாயும்
இதனிடையே வீடியோ வைரல் ஆன நிலையில் நொய்டா செக்டர் 39 போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதுடன், செக்யூரிட்டி பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

புகார் அளித்திருக்கலாம்
இதனிடையே செக்யூரிட்டி பணியாளரை குடியிருப்புவாசி தாக்கியது உண்மையாக இருந்தாலும் , கூட்டு சேர்ந்து இப்படி தாக்கி பழிவாங்குவது ஏற்க முடியாது என்றும் அந்த குடியிருப்பாளருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications