என்.எல்.சி.பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு.. லோக்சபாவில் விவாதிக்க வேண்டும்.. திமுக நோட்டீஸ்!
டெல்லி: என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு பற்றி லோக் சபாவில் விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி நிறுவனத்திற்கு கேட் (GATE) தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இது தமிழக மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து என்எல்சி நிறுவனத்தின் பணிகளுக்கு தமிழர்கள் தேர்வு செய்யப்படாததன் மூலம் தமிழ்நாட்டு பொறியாளர்களுக்கு திட்டமிட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பொறியாளர் நியமனத்தில் பல ஆண்டுகளாகவே தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை.

வட இந்தியர்களுக்கு ஆதரவாக போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன. என்.எல்.சியின் உயர்பதவிகளை முழுக்க முழுக்க வட இந்தியர்கள் ஆக்கிரமித்திருப்பது தான் இதற்கு காரணம். என்.எல்.சி சுரங்கங்கள் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் பாமர மக்கள். தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் தமிழர்கள். அதனால் வளர்ந்த என்.எல்.சி நிறுவனத்தின் பயன்களை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி என ஏராளமான அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் என்.எல்.சி பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டன அறிக்கை வெளியிட்டார்.

இதுதொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில், என்.எல்.சி. பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 299 பட்டதாரிப் பொறியாளர்களுக்கும் ஆகஸ்ட் 1 (இன்று) தேதி நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பணிவாய்ப்புகளும் தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில், பணி நியமனத்திற்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு பற்றி லோக்சபாவில் விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் என்.எல்.சி. பணிகள் குறித்து திமுக விரைவில் கடுமையான விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications