டெல்டா வைரஸை விட.. டெல்டா பிளஸ் வீரியம் மிக்கதா?.. இன்சாகோக் வெளியிட்ட முக்கிய தகவல்!
டெல்லி: டெல்டா பிளஸ் கொரோனா மாறுபாடு டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை என்று மரபணு வரிசைமுறையில் ஈடுபட்டுள்ள அரசாங்க குழுவின் கூட்டமைப்பான இன்சாகோக் தெரிவித்துள்ளது.
பொதுவாக டெல்டா பிளஸ் என அழைக்கப்படும் AY.1, மற்றும் AY.2 ஆகிய வைரஸ் மாறுபாடுகள் டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டு மாறுபாடுகளும் ஜூன் மாதத்தில் நாட்டில் வரிசைப்படுத்தப்பட்ட மரபணு மாதிரிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன என்று சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டாவை விட AY.1 அல்லது AY.2 எதுவும் பரவக்கூடியதாக இல்லை. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான், மத்திய பிரதேசத்தில் போபால் மற்றும் தமிழ்நாட்டின் சென்னை ஆகிய நான்கு பகுதிகளில் டெல்டா பிளஸ் வைரஸ் அதிகரித்து வரும் போக்குக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் இன்சாகோக் கூறியுள்ளது.
அதே வேளையில் டெல்டா மாறுபாடு (பி .1.617.2) சமீபத்திய மாதிரிகளில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் புதிய பாதிப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பரம்பரையாக இது உள்ளது என்றும் இன்சாகோக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மார்ச் முதல் மே வரை கொரோனா வைரஸ் இரண்டாவது அலைக்கு டெல்டா மாறுபாடு வைரசே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications