தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைன் முன்பதிவு கட்டாயமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு.. ஏன் தெரியுமா?
டெல்லி: 18-44 வயதுடையவர்கள் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது தான் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த மே 1ஆம் தேதி முதல் நாட்டில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பும் 18-44 வயதுடையவர்கள் கட்டாயம் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் 18-44 வயதுடையவர்களுக்கு ஆன் சைட் முறையில் பதிவு செய்ய முடியாது என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. தடுப்பூசி போடும் இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது 18-44 வயதுடையவர்கள் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளக் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வேக்சின் எடுத்துக் கொள்ள விரும்புவோர் தடுப்பூசி மையங்களிலேயே சென்று நேரடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவு செய்பவர்களில் பெரும்பாலும் தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்வதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், நாட்டில் உள்ள தடுப்பூசி மையங்களில் 71% அதாவது 69,995 மையங்கள் கிராமங்களிலேயே உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் தடுப்பூசி பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகவும், கிராமங்களில் வேக்சின் மையங்களில் நேரடியாகச் சென்று பதிவு செய்பவர்களே அதிகம் என்றும் சுகாதாரத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகவே 18-44 வயதுடையவர்களுக்கு ஆன்லைன் முன்பதிவில் இருந்து அரசு விலக்கு அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications