நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தப்படுவது ஜனநாயகம் தான்.. நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த மஹுவா மொய்த்ரா!
டெல்லி: அண்மைக் காலங்களாக நாடாளுமன்றத்தில் அதிகமாக அச்சுறுத்தப்படுவது ஜனநாயகம் மட்டுமே என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபத்னி என காங்கிரஸ் லோக் சபா எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்.பி.-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்ன ரெடியா? ஆளுநர் மாளிகையில் மோடி கேட்ட கேள்வி! இரவோடு இரவாக மீட்டிங் போட்டது ஏன்? சீக்ரெட்!
பாஜக போராட்டம்
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாஜகவின் பெண் எம்.பி.-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர். அதோடு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை முன்வைத்து லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவிலும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்
சோனியா காந்தி கோபம்?
இதனிடையே நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, பாஜகவின் எம்.பி. ரமாதேவியை சந்தித்து பேசினார். அப்போது, இந்த விஷயத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார். இதில் என்னை ஏன் இழுக்கின்றனர்' என கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்மிருதி இரானி குறுக்கீட்டு பேச முற்பட்டபோது, சோனியா காந்தி கோபமாக, என்னிடம் நீங்கள் பேச வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியது.
நிர்மலா சீதாராமன் பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பாஜக மூத்த தலைவர் ரமாதேவியிடம் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய சோனியா காந்தி வந்தபோது, பாஜக எம்.பி.-க்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தனர். அதேபோல் பாஜக எம்.பி. ஒருவரிடம் சோனியா காந்தி, நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் என்று கோபமாக கூறியதாக தெரிவித்தார்.அதேபோல் சோனியா காந்தி - ஸ்மிருதி இரானி விவகாரம் உச்சத்தை எட்டியுள்ளது.
மஹுவா மொய்த்ரா கிண்டல்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து முதல் நாள் நாடாளுமன்றம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி பற்றி விவாதத்தை புறக்கணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், திட்டமிட்ட குழப்பத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியது வருத்தம் அளிக்கிறது. அண்மைக் காலங்களில், நாடாளுமன்றத்தில் அதிகம் அச்சுறுத்தப்படுவது ஜனநாயகம் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.