பழிதீர்த்த இந்திய ராணுவம்.. "பாரத் மாதா கீ ஜெய்".. வெற்றி முழக்கமிடும் காஷ்மீர் மக்கள்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பதிலடியை தொடங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின்கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் தாக்குதலால் அரண்டு போயுள்ளது பாகிஸ்தான். இந்த தாக்குதலை காஷ்மீர் மக்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்திய ராணுவத்துக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. எந்த நேரத்திலும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்திய ராணுவம்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதே என்றும், அண்டை நாட்டுடன் மோதலை அதிகரிப்பதற்கான நோக்கம் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன.
பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமாக தாக்குதல்களை எதிரிகள் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நடவடிக்கைக்கு தக்க பதிலடி, சரியான இடத்தில் உரிய நேரத்தில் அளிக்கப்படும் என்றும், இந்தியாவின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது. துக்கம் சூழப் போகிறது என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, எல்லைக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அமைதியைக் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ஜம்மு காஷ்மீர் மக்களிடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் காஷ்மீர் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காஷ்மீர் மக்கள் ஒன்று திரண்டு பாரத் மாதா கீ ஜெய் என்ற வெற்றி முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் கூறியதாவது: பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுப்பதற்காக காஷ்மீர் மக்கள் அனைவரும் காத்திருந்தோம். நாங்கள் இந்திய ராணுவத்துக்கு எப்போதும் ஆதரவாக நிற்போம். தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications