மாற்றத்தை கவனிச்சீங்களா? நன்றி பிரதமரே.. திடீரென்று டோனை மாற்றி பேசிய ப சிதம்பரம்! மேட்டர் இதுதான்
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் திடீரென்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று சொன்னார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார்.
இவ்வாறு அவர் பேசியது உண்மைக்கு மாறான தகவல் எனவும், தங்களது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் விளக்கமளித்துள்ளனர்.
அதேபோல இவரது பேச்சுக்கு எதிராக காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க தாமதிக்கிறது என்றும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மோடியின் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தை பெற்றிருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "மோடி ஆட்சி முடிந்துவிட்டது. சில நாட்களாக பிஜேபி ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று முதல் என்டிஏ ஆட்சி தொடங்கியுள்ளது.
ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா? ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. நன்றி, பிரதமரே!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications