'டெல்லி கலவர வழக்கில் விசாரணை மிக மோசமாக உள்ளது.. அலட்சியம் காட்டும் போலீசார்'- நீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த கலவர வழக்குகளில் போலிசாரின் விசாரணை மிக மோசமாக உள்ளது வேதனை தருவதாக டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
அப்படி தான் டெல்லியிலும் தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்து கொண்டிருந்த டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென கலவரம் வெடித்தது.

ஆசிட் வீசிய வழக்கு
இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படி கடந்த 2020 பிப்ரவரி 25ஆம் தேதி, போலீசாரை நோக்கி அஷ்ரப் அலி என்பவர் ஆசிட் வீச முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் முன் விசாரணைக்கு வந்தது.

டெல்லி கலவரம்
அப்போது நீதிபதி வினோத் யாதவ் கூறுகையில், "டெல்லி கலவரம் தொடர்பான பல்வேறு வழக்குகளில் விசாரணை மிகவும் மோசமாக உள்ளது மனவேதனை அளிக்கிறது. டெல்லி கலவரம் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முறையாக ஆஜராவதில்லை. விசாரணையை முறையாக நடத்துவதிலும் அவர்கள் முனைப்புக் காட்டுவதில்லை. அரைகுறையான குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்கின்றனர். இதனால் ஒரு சிலர் நபர்கள் மீது மட்டும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர்களும் வேறு வழியின்றி தொடர்ந்து சிறையிலிருந்து வருகின்றனர்.

டெல்லி போலீஸ் கமிஷனர் தலையிட வேண்டும்
குறிப்பாக இந்த வழக்கு ஒரு விஷயத்தை நமக்குத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் அதிகாரிகளாகவே உள்ளனர். ஆனால் அப்போதும்கூட ஆசிட் மாதிரிகளைச் சேகரித்து சோதனைச் செய்ய விசாரணை அதிகாரிகள் எந்தவொரு முயற்சிகளையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யவில்லை. பல்வேறு வழக்குகளிலும் இதை நிலைதான். எனவே, டெல்லி போலீஸ் கமிஷனர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அநீதி
மேலும், பல்வேறு வழக்குகளிலும் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராவதில்லை என்றும் வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் காலையில் குற்றப்பத்திரிகையை மின்னஞ்சலில் மட்டும் அனுப்புவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அநீதி ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் போலீசார் இதில் தேவையான நிபுணர்களின் உதவியையும்கூட நாடலாம் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications