பெகாசஸ் வழக்கு.. வலைத்தளங்களில் விவாதிப்பதை விட்டுவிட்டு.. நீதிமன்றத்தை நம்புங்கள்.. தலைமை நீதிபதி
டெல்லி: பெகாசஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் சமூக வலைத்தளங்களில் விவாதிப்பதை விட்டுவிட்டு உச்ச நீதிமன்றம் மீதும் நீதிமன்ற நடவடிக்கைகள் மீதும் மனுதாரர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா இன்று தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், பல்வேறு பத்திரிகையாளர்கள், ஒரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தொடங்கி பல முன்னணி பிரபலங்களின், அரசியல் தலைவர்களின் போன்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் எஸ்ஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நீட் &அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க.. இன்றே கடைசி நாள்..அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு
விசாரணை
உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் வினித் சரண், சூர்யா காந்த் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். கடந்த வாரம் இதில் முதல் கட்ட விசாரணை நடந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்றது.
கடந்த வாரம்
கடந்த வாரம் விசாரணையின் போது பெகாசஸ் விவகாரம் குறித்த கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வாதங்களை மனுதாரர் பத்திரிகையாளர் என். ராம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் மேற்கோள் காட்டி இருந்தார். கலிபோர்னியா நீதிமன்றத்தில் பெகாசஸ் ஸ்பைவேருக்கு எதிராக வாட்ஸ் ஆப் தொடர்ந்த வழக்கில் செய்யப்பட்ட வாதங்களை மேற்கோள் காட்டி இருந்தார்.
வேவு
ஆனால் இதில் இந்திய பத்திரிக்கையாளர்கள் வேவு பார்க்கப்பட்டது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. இதை கடந்த விசாரணையில் விமர்சனம் செய்து இருந்த நீதிபதி ரமணா, கலிபோர்னியா வழக்கில் இந்தியாவில் நடந்த வேவு பணிகள் குறித்து எதுவுமே இல்லையே.. என்று விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில்தான் இன்று நடந்த விசாரணையில் கபில் சிபல் இந்த விவகாரம் குறித்து பேசினார்.
கலிபோர்னியா
கலிபோர்னியா வழக்கு குறித்து தலைமை நீதிபதி வைத்த வாதங்கள் காரணமாக என்னுடைய மனுதாரரை (என். ராமை ) இணையத்தில் சிலர் கிண்டல் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி என்வி ரமணா சில அறிவுரைகளை வழங்கினார். சோஷியல் மீடியாவில் இந்த வழக்கு குறித்து தேவையின்றி விவாதிப்பது அவசியம் இல்லை என்று நீதிபதி ரமணா குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி ரமணா
தலைமை நீதிபதி ரமணா இன்று பேசுகையில், மிஸ்டர் ஷியாம் திவான், கபில் சிபல், சியு சிங், மீனாட்சி அரோரா, ராகேஷ் திவேதி போன்ற வழக்கறிஞர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு எதை பற்றியும் பேச உரிமை இருக்கிறது. நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். ஆனால் பெகாஸஸ் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துவிட்டு அது தொடர்பாக இணையத்தில் தனியாக விவாதம் நடத்துவது சரியாக இருக்காது .
உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கலாம்
உங்களுக்கு ஏதாவது விவாதிக்க வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கலாம். ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம். அதைவிட்டுவிட்டு இணையத்தில் தனியாக ஆலோசனைகள் நடத்துவது அவசியமற்றது, என்று குறிப்பிட்டார். என்.ராமை கிண்டல் செய்வதாக கபில் சிபல் கூறியதும், நீதிபதி ரமணா இப்படி அறிவுரை வழங்கினார்.
நம்பிக்கை
மேலும், நீதிமன்றம் மீது நம்பிக்கை வையுங்கள். வழக்கை முழுமையாக விசாரிப்போம். நீதித்துறை மீது உங்கள் நம்பிக்கை வைத்திருங்கள். தேவையற்ற விவாதத்தை சமூக வலைத்தளங்களில் தவிர்க்கலாம். இதுபோன்ற விவாதங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் வழக்கு இங்கே நடக்கும் போது அதைப்பற்றி வெளியே மனுதாரர்கள் விவாதிப்பது சரியாக இருக்காது, என்று நீதிபதி ரமணா குறிப்பிட்டார்.
கபில் சிபல்
கபில் சிபலை பார்த்து விசாரணையின் போதே தனியாக சொன்ன தலைமை நீதிபதி, உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். நீங்கள் சீனியர், அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள். ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தால் அதை எங்களிடம் நீங்கள் தெரிவிக்கலாம். எல்லோரின் கருத்தையும் கேட்கவே நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார்.
Recommended Video
திங்கள் கிழமை
இதை ஏற்றுக்கொண்ட கபில் சிபல், நீதிபதிகள் சொல்வது சரி, மனுதாரர் தரப்புகள் யாரும் இந்த வழக்கு பற்றி சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்வது சரியாக இருக்காது, என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கில் மனுதாரர்களின் மனுக்களை முழுதாக படிக்க கால அவகாசம் வேண்டும், வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வேண்டும் என்று சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, வெள்ளிக்கிழமை எனக்கு வேறு சில வேலைகள் இருப்பதால் நான் அன்று வர முடியாது. இதனால் திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளது.