அதிகரிக்கும் விலைவாசி.. மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் வாங்குபவர்களுக்குதான் பெரும் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்கும் பொதுமக்கள் விலைவாசி உயர்வால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள் என்று பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 2022க்கான தேசிய சராசரி பணவீக்கம் மார்ச் மாதத்தின் 6.2 சதவீதத்தில் இருந்து 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இதனால், பாமர மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவிலான பொருளாதார சவால்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் - டீசல் விலை உயர்வால், பொதுமக்கள் பயன்படுத்தும் சிறிய வகை பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே விலைவாசி உயர்வால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், சின்ன சின்ன பொருட்களான பிஸ்கெட், சோப் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க பெரு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
முக்கியமாக பொதுமக்களால் அதிகளவில் வாங்கப்படும் பிஸ்கெட், சோப் உள்ளிட்ட பொருட்களுக்கான தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. இருந்தாலும், அவற்றின் எடை குறைக்கப்படாது எனவும், விலை உயர்த்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக குறைந்தபட்ச விலையில் விற்பனையாகும் பொருட்களின் எடையை குறைத்தாலோ, விலையை அதிகரித்தாலோ, அது விற்பனையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
அப்படி செய்தால் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் எண்ணிக்கையில் சரிவை சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் பிரிட்டானியா, இமாமி உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பாக குறைந்த விலையில் விற்கப்படும் அதாவது.. சிறிய பொருட்களே அதிகளவில் பொதுமக்களால் வாங்கப்படுகின்றன.
இதுகுறித்து இமாமி நிறுவன துணை தலைவர் மோஹன் கோயங்கா கூறுகையில், விலைவாசி உயர்வு காரணமாக மக்களால் அதிகமாக வாங்கப்படும் சிறிய ரக பேக்குகளின் விற்பனையில் பெரிய வளர்ச்சி இல்லை. ஆனாலும் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தார். அதற்கு பதிலாக தங்கள் நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்படும் மற்ற பேக்குகளின் விலை 7-8% வரை உயர்த்த வாய்ப்புள்ளது என்றார்.

சிறிய நகரத்தை மையமாகக் கொண்ட ஃபேஷன் சில்லறை விற்பனை சங்கிலியானது, கடந்த காலாண்டில் எந்த தள்ளுபடியும் இல்லாமல், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க குறைந்த விலையில் உள்ள தயாரிப்புகளைக் கொண்டு அதிக விளம்பரங்களைச் செய்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான சிறிய வகை பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள். குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை உயர்த்த முயற்சிக்கும் போது, அதற்கு நேர் எதிராக பொதுமக்களின் கையில் பணபுழக்கம் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினரை பாதிக்காத வகையில் அதிக விலை கொண்ட பொருட்களின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

வி மார்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் லலித் அகர்வால் கூறுகையில், மாதம் 25 ஆயிரத்திற்கு குறைவாக ஊதியம் பெறும் பொதுமக்கள் பலரும் விலைவாசி உயர்வின் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால், அவர்கள் திட்டமிட்டு செய்யும் செலவுகளில் இருந்து மாதம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பட்ஜெட் பிரச்னை ஏற்படுவதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் மத்தியில் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications