சீனாவில் கொரோனா விஸ்வரூபம்.. இந்தியாவில் கட்டுப்பாடுகள் வருமா? தொடங்கியது மத்திய அரசின் அவசர ஆலோசனை
டெல்லி: சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுக்க பல வழிகாட்டு நெறிமுறைகள், இந்தக் கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மக்களை மறுபடியும் மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 188 கேஸ்கள் பதிவு..!
மீண்டும் கொரோனா பீதி
கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை உலகையே புரட்டிப் போட்ட கொரோனா பெருந்தொற்று, கடந்த 6 மாதங்களாகதான் சற்று அடங்கியிருந்தது. இதனால் உலக மக்களும் கொரோனா அச்சத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர். மேலும், கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்துறையும் இப்போதுதான் அந்த பாதிப்பில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடங்கியது ஆலோசனைக் கூட்டம்
இப்போது சீனாவில் என்ன நிலைமை இருக்கிறதோ, அதே நிலைமைதான் 2019-ம் ஆண்டு பிற்பகுதியிலும் இருந்தது. பின்னர் ஒருசில மாதங்களுக்காகவே தாய்லாந்து, இந்தியா, மலேசியா போன்ற அண்டை நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸ், தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பரவுவதை தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது.
என்னென்ன விஷயங்கள்
இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் உட்பட அத்துறையின் முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இதில், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவை பாதிக்குமா? இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? மருத்துவமனைகள் எத்தகைய தயார் நிலையில் இருக்க வேண்டும்? என்பன போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கொரோனா பரவலை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடக்கூடும் எனத் தெரிகிறது. குறிப்பாக, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், கைகளில் உள்ள வைரஸ்களை அழிக்க சானிட்டைஸர் பயன்படுத்துதல் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.