பிஎம் கிசான் பயனாளிகள் குறைப்பு? விவசாயிகளின் உரிமையை பறித்து யாருக்கு உதவுறீங்க? - கார்கே விளாசல்!
டெல்லி : விவசாயிகளின் உரிமையை பறிப்பதன் மூலமாக நீங்கள் யாருக்கு பலன் அளிக்கிறீர்கள்? என பாஜக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை, மூன்று ஆண்டுகளில் 67% குறைந்திருப்பது ஆர்டிஐ தகவல் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பிஎம் கிசான்
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000 வீதம் 5 ஏக்கருக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

ஆர்டிஐ தகவல்
இந்தத் திட்டம் குறித்து சமூக செயற்பாட்டாளர் கன்னையா குமார் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ மனுவுக்கு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அளித்திருக்கும் பதில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் முதல் தவணை மானியம் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், 11-வது தவணையில் மானியம் பெற்றவர்கள் எண்ணிக்கை 67% சரிந்துள்ளது.

பயனாளிகள் எண்ணிக்கை கடும் சரிவு
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2019-ல் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மே - ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட 11-வது தவணையில் பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 3.87 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஆறாவது தவணைக்கு பிறகு இந்த எண்ணிக்கை வேகமாக சரிவை நோக்கி சென்றிருக்கிறது.

67% குறைவு
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பதிவில் இதுதொடர்பாக மத்திய பாஜக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். பயனாளிகளின் சரிவை விளக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், உணவு வழங்கும் மக்களின் உரிமையை பறிப்பது தான் மோடி அரசின் கொள்கை. பிரதமரின் கிசான் திட்டத்தின் முதல் தவணை கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட போதிலிருந்து தற்போது 67 சதவீதம் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.

யாருக்கு பலன்?
அதாவது பயனாளிகள் எண்ணிக்கை 11.87 கோடியில் இருந்து கடைசியாக மே மாத தவணை வழங்கப்பட்ட போது பயனாளிகள் எண்ணிக்கை 3.87 கோடியாக சரிந்துள்ளது. ஒவ்வொரு தவணைக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது தான் உண்மை. விவசாயிகளின் உரிமையை பறிப்பதன் மூலமாக நீங்கள் யாருக்கு பலன் அளிக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications