உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் ஒருவர் மம்தா; டைம் இதழ் கணிப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சீரம் சிஇஓ ஆதர் பூனவல்லா ஆகியார் சர்வதேச அளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் சர்வதேச அளவில் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சர்வதேச அளவில் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்களின் பட்டியலை டைம்ஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டைம்ஸ் பட்டியல்
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள உலகத் தலைவர்கள் என்று பார்த்தால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலியப் பிரதமர் மரியோ டிராகி, இஸ்ரேல் பிரதமர் நாப்தாலி பென்னட், ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்கன் துணை அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் காதர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

நரேந்திர மோடி
இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பிரதமர் மோடி இந்தப் பட்டியலில் இடம் பெறுவது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளாகவே அவர் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். பிரதமர் மோடி குறித்து டைம்ஸ் இதழில், "இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகளைக் காட்டிலும் உண்மையான கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இப்படி கொரோனா தவறாகக் கையாண்டதால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சற்று குறைந்தது. இருப்பினும், அது மற்ற தலைவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே (71%) உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா
அதேபோல இந்தப் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம் பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடி தொடங்கி அனைத்து தலைவர்களும் மேற்கு வங்கத்தை முற்றுகையிட்டனர். இருப்பினும், அதையெல்லாம் தாண்டி திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா வெற்றி பெற வைத்தார். கடந்த 2011 முதல் மேற்கு வங்க முதல்வராக உள்ள மம்தாவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

சீரம் ஆதர் பூனவல்லா
அதேபோல இந்தப் பட்டியலில் சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவல்லாவும் இடம் பெற்றுள்ளார். 15 நபர்களைக் கொண்ட "முன்னோடிகள்" என்ற பட்டியலில் ஆதர் பூனவல்லா இடம் பெற்றுள்ளார். அவரை பற்றி டைம்ஸ் இதழில், "சர்வதேச அளவில் நிலவும் தடுப்பூசி சமத்துவமின்மை அப்பட்டமாகத் தெரிகிறது. உலகின் ஒரு பகுதியில் தடுப்பூசி பணிகள் மந்தமாக நடைபெற்றால் அது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மிகவும் ஆபத்தான உருமாறிய கொரோனா ஏற்படும் ஆபத்தும் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை ஏற்படுவதைத் தடுக்க ஆதர் பூனவல்லாவால் முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கன் துணைப் பிரதமர்
இந்தப் பட்டியலில் தாலிபான் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ஆப்கன் துணை பூதரமாக அறிவிக்கப்பட்டவருமான அப்துல் கனி பரதரும் இடம் பெற்றுள்ளார்.. "மக்களை ஈர்க்கும் ராணுவத் தலைவர் மற்றும் ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்ட நபர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் குறித்து டைம்ஸ் இதழில், "ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்துக்கான முன்னோடியாக அவர் நிற்கிறார். அடிப்படைவாத கருத்துகளைச் சற்று விலக்கி வைத்துள்ள தாலிபான்களின் முகமாகத் திகழ்கிறார்" என்று அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications