“ஹலோ” ரிஷி.. நான் மோடி.. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு பறந்த போன் - என்ன பேசி இருக்காங்க தெரியுமா?
டெல்லி : பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். முதல் அழைப்பிலேயே இரு தலைவர்களும் இந்தியா - பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆலோசித்துள்ளனர்.
பிரிட்டன் முன்னள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்த முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்ட் ஆகியோர் எம்.பிக்கள் ஆதரவு குறைவாக இருந்ததால் அடுத்தடுத்து அதிலிருந்து விலகினர்.
ரிஷி சுனக் இந்தியரே இல்லை.. அவர் 100% பிரிட்டிஷ் தான்.. ஆனாலும் அவர் ஆரியர்! சொல்வது பாஜக உமா பாரதி
பிரதமர் ரிஷி சுனக்
இதையடுத்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் சட்டப்படி நாட்டின் மூன்றாம் மன்னர் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து நேற்று முந்தினம் சார்லஸை சந்தித்து பிரதமராக பதவியேற்றார் ரிஷி சுனக்.
வாழ்த்திய மோடி
இதனையடுத்து பிரதமர் மோடி வாழ்த்து ரிஷி சுனக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். "ரிஷி சுனக்கிற்கு அன்பான வாழ்த்துக்கள்! நீங்கள் பிரிட்டன் பிரதமராக வரும்போது, சர்வதேச பிரச்சனைகளில் நெருக்கமாக பணியாற்றலாம் என்றும், இலக்கு 2030ஐ செயல்படுத்தலாம் எனவும் எதிர்நோக்குகிறேன். வரலாற்று உறவுகளை நவீன கூட்டாளியாக்கும், பிரிட்டன் வாழ் இந்தியர்களின் 'வாழும் பாலமாக' திகழ்பவருக்கு தீபாவளி வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசியில் வாழ்த்து
இந்த நிலையில் தொலைபேசியில் ரிஷி சுனக்கை வாழ்த்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "ரிஷி சுனக்கிடம் இன்று பேசியது மகிழ்ச்சி. பிரிட்டன் பிரதமராக அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இரு நாடுகள் இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவோம். விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை தொடங்கும் பணிகளை நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக்கொண்டோம்.
ரிஷி சுனக் நன்றி
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ட்விட்டரில் ரிஷி சுனக் நன்றி தெரிவித்து உள்ளார். "நான் என்னுடைய புதிய பொறுப்பை ஏற்றதற்காக நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்கு என்னுடைய நன்றிகள். இந்தியாவும் பிரிட்டனும் பல விசயங்களை பகிர்ந்துகொள்கின்றன. அடுத்த சில மாதங்கள், ஆண்டுகளில் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் முக்கிய இடத்தை அடையும்." என்று பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர்
இந்த நிலையில் நாளை பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளவெர்லி இந்தியா வருகை தருகிறார். இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை சந்தித்து அவர் பேச இருக்கிறார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.