சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவின் பதவி பறிப்பு
டெல்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவின் பதவியைப் பறித்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு
அலோக் வர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில்தான் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டது.
சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட அஸ்தானா இடையே பனிப் போர் மூண்டது. இருவரும் பரஸ்பரம் புகார்களைக் கூறினர். இந்த நிலையில் மத்திய அரசு அதிரடியாக இதில் தலையிட்டது. அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது.
இதை எதிர்த்து அலோக் வெர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் முடிவு செல்லாது என்று அறிவித்தது. மேலும் சிபிஐ இயக்குநர் மீதான புகார்கள் குறித்து தேர்வுக் குழு முடிவெடுக்க உத்தரவிட்டது.
தேர்வுக் குழு என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலானது. இதில் உறுப்பினர்களாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் குழு இன்று அவரது இல்லத்தில் கூடியது. ஆனால் குழுவிலிருந்து தான் விலகுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். அவருக்குப் பதில் நீதிபதி ஏ.கே. சிக்ரி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதையடுத்து இன்று மாலை பிரதமர் மோடி வீட்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் மல்லிகார்ஜூன கார்கே, நீதிபதி சிக்ரி ஆகியோர் கூடி விவாதித்தனர். விவாதத்தின் இறுதியில் அலோக் வெர்மா மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அவரை அப்பதவியிலிருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அலோக் வெர்மா தனது பதவியை இழந்துள்ளார்.
அலோக் வெர்மாவை மீண்டும் அப்பதவியில் உச்சநீீதிமன்றம் அமர்த்திய 48 மணி நேரத்தில் அவரை மோடி தலைமையிலான தேர்வுக் குழு நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்கே மட்டும் எதிர்ப்பு
மோடி, கார்கே, சிக்ரி ஆகியோரில் கார்கே மட்டும் அலோக் வெர்மாவை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி சிக்ரி, அலோக் வெர்மா மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அவரது நீக்கம் அவசியம் என்று கூறினார். இதையடுத்து 2-1 என்ற பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் அலோக் வெர்மா பதவி பறிக்கப்பட்டது.
இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ்
அலோக் வெர்மா பதவி நீக்கத்தைத் தொடர்ந்து இடைக்கால சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகேஸ்வர ராவ் தற்போது கூடுதல் இயக்குநராக இருந்து வருகிறார். புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை நாகேஸ்வர ராவ் இயக்குநர் பொறுப்பை கவனித்து வருவார்.